பக்கம்:தாய்மொழி காப்போம்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவியரச முடியரசன்

19



12. செல்லடி செல்லடி இந்திப் பெண்ணே

நில்லடி நில்லடி இந்திப்பெண்ணெ-உன்
நெஞ்சினில் என்ன துணிச்சலடி!
சொல்லடி சொல்லடி இந்திப்பெண்ணே-உன்
சூடு சுரணைகள் அற்றனவோ!

மூன்று முறையிங்கு வந்தனையே-நீ
மூக்கறு பட்டுமே சென்றனையே!
ஏன்தமிழ் நாட்டினை நாடுகிறாய்?-பின்
ஏனடி பட்டதும் ஓடுகிறாய்?

சான்றவர் சொல்லையும் மீறுகிறாய்-படி
தாண்டிப் பிறர்மனை ஏறுகிறாய்
ஈன்றவர் கண்ணெதிர் நாறுகிறாய்-உனை
ஏற்பவர் யாரெனத் தேடுகிறாய்

ஏற்பவர் தோள்களைத் தொற்றிட்டி-மனம்
ஈபவர் கால்களைச் சுற்றிட்டி
மேற்படி வேலையைக் கற்றிட்டி-எம்
மீதினில் ஆசையை விட்டிட்டி

மாட்சிமை ஏதொன்றுங் கற்றிலைநீ-நல்
மானமும் தோற்றமும் உற்றிலைநீ
ஆட்சியில் நற்றிறம் கற்றிலை நீ-ஓர்
ஆணவம் மட்டுமே பெற்றனைநீ

நாட்டினில் ஒற்றுமை நாடுகிறோம்-அதை
நாளும் நினைந்திங்குப் பாடுகிறோம்
நாட்டைப் பிளந்திட நாடுகிறாய்-அது
நன்மை எனத்திட்டம் போடுகிறாய்!

போவென வாயிலை மூடுகிறோம்-வரப்
பொந்துள தோவென நாடுகிறாய்
சாவென்ற போதிலும் நாடவிடோம்-எம்
சந்ததி யின்மனம் வாடவிடோம்

நில்லடி நில்லடி இந்திப்பெண்ணே-உன்
நெஞ்சினில் என்ன துணிச்சலடி!
செல்லடி செல்லடி இந்திப்பெண்ணே-இதைச்
சிந்தையில் வைத்திரு சென்றபின்னே.

(20-12-1979)