பக்கம்:தாய்மொழி காப்போம்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

தாய்மொழி காப்போம்



13. ஒன்றே நினைப்பீர்!

பேசுங் கலையாவும் பேணிவந்த முன்னவன், தான்
பேசும் மொழிக்குப் பெருமை தரும்வகையில்
எண்ணும் எழுத்தும் இயற்றி நமக்களித்தான்
கண்ணென் றவைதம்மைக் காத்து வளர்த்தோமா?
கீழ்வா யிலக்கம் கிழடாகிப் போனதென்று
தாழ்வாக நாமதனைத் தள்ளிக் கிடத்திவிட்டோம்;
மிஞ்சும் எழுத்தேனும் விஞ்சுமா என்றாலோ
அஞ்சும் நிலைக்குத்தான் ஆளாகி நிற்கின்றோம்;

நாடாளும் நல்லோர் நடந்துவரும் போக்குத்தான்
கேடாகும் என்று கிறுகிறுத்து வாடுகின்றோம்;
நாட்டில் ஒருமைதனை நாட்ட நினைவோர்தாம்
கேட்டில்விளை யாடக் கிளர்ந்தெழுந்தால் என்செய்வோம்!
'உங்கள் எழுத்தை ஒதுக்கிவிட்டு மேற்கோட்டில்
தொங்கும் எழுத்தைத் துணைக்கொள்க; ஒற்றுமையைக்
கண்டு விடலாம் எனத்தான் கதறுகின்றார்;
துண்டு படத்தான் துணைசெய்யும் இக்கதறல்;
ஆள்வோர் கருத்தும் அதுவாயின் ஆகட்டும்!
வீழ்வோர்தாம் வீழட்டும்! வாழ்வோர்தாம் வாழட்டும்!
தாய்மொழியின் ஆக்கந் தடையுறுதல் நாம்காணின்
காய்மொழிகள் வேண்டா கனிமொழிகள் சொல்லிடுவோம்

கேட்டால் நிலைவாழும் கேளாரேல்...? நான் சொன்னால்
பாட்டின் தரங்குறையும் பார்த்து முடிவுசெய்க!
கட்சி சமையம் கடந்துதமிழ்த் தொண்டுசெய
நச்சி எழுதல் நமதுகடன் என்றுணர்ந்து
காக்க முனைந்தெழுக! காவா தொழிவீரேல்
போக்க முடியாத புல்லடிமை நேரும்
எழுத்தை இழக்க இசைவீரேல் உங்கள்
கழுத்தைக் கொடுத்துக் கலங்கும் நிலைபெறுவீர்!
ஆண்டாண்டு காலம் அழியாத் தமிழ்மொழிக்கு
வேண்டாதார் இந்த வினையெல்லாம் செய்கின்றார்;

வீரத் தமிழினத்தின் வேரறுக்க மாற்றலர்தாம்
ஈரத் துணியிட்டு நும்கழுத்தை ஈர்கின்றார்;
காட்டிக் கொடுக்கும் கயமைக் குணமிங்கு