பக்கம்:தாய்மொழி காப்போம்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவியரச முடியரசன்

23



வெள்ளையன் விடுத்துச் சென்றான்
விரகினில் எடுத்துக் கொண்டாய்
கொள்ளையும் அடித்து விட்டாய்
கொடுஞ்செயல் பலவுஞ் செய்தாய்
வெள்ளைநெஞ் சுடைய யானும்
விடுதலைப் பயனுங் காணேன்
தள்ளையைக் கொல்ல வந்தால்
தலைமகன் பார்த்தா நிற்பான்?

இந்தியைப் புகுத்தி என்றன்
இளந்தமிழ் நோகச் செய்ய
வந்திடின் நின்னை நானும்
வாழ்த்தவா செய்வேன்? நெஞ்சம்
நொந்துழன் றழுவேன் பின்னர்
நொடியினில் துடித்தெ ழுந்து
வெந்தழல் விழியிற் காட்டி
விரட்டுவேன் வெருண்டு போவாய்

என்னுடன் உன்னைக் கூட்டி
இணைத்தனன் எவனோ வந்து
பின்னுமென் னுடைமை யெல்லாம்
பிடுங்கினை! என்றன் தாய்க்கும்
இன்னலே செயநி னைந்தால்
இனியுமுன் தொடர்பெ தற்கு?
சொன்னதும் பிரிந்து போபோ
சுடுமொழி தோன்று முன்னே

என்சொலைக் கேட்டு நெஞ்சுட்
சீறினை! என்ன செய்வாய்?
வஞ்சனை பலவும் செய்வாய்
வழக்குகள் தொடுத்து நிற்பாய்
வெஞ்சிறைக் கூட மென்று
வெருட்டுவாய் அடபோ பேதாய்
அஞ்சினேன் என்றால் என்றன்
அன்னையைக் காப்பு தெங்கே?

 

- 10.3.1587


(விரகு - தந்திரம், தள்ளை - தாய்)