பக்கம்:தாய்மொழி காப்போம்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

தாய்மொழி காப்போம்



26. தாய்மொழிப்பற்று

கன்னட மாநிலங் காணும் ஆவலால்
என்னொடு சிலர்வர ஏகினேன்; ஆங்குப்
பிருந்தா வனத்தின் பேரெழில் விழிக்கு
விருந்தா கியது வியந்து மகிழ்ந்தேன்;
கைத்திறம் வல்லார் கண்கவர் ஓவிய
மெய்த்திறம் காட்டி வைத்தநற் கூடம்,
வண்ணக் குலமலர் வகைவகை பூத்துத்
தண்ணென் றெழிலுடன் தலைநிமிர் பூங்கா,
மடங்கல் உலவும் மரஞ்செறி காவுடன்
நடங்கொள் மயில்திரி நலங்கெழு சோலை

அடங்கலும் நோக்கி அகமிக மலர்ந்தேன்;
இடம்படுந் தலைநகர் ஏற்றங் காண
நகர்வலம் வந்தேன் நாற்புறத் தெழிலும்
பகர்தல் அரிதே; பார்த்துக் களித்தேன்;
அருகில் ஒரிசை யரங்கு நிகழ்ந்தது;
உருகும் இசையால் உள்ளம் நெகிழ்ந்தது
பொருள்விளங் காமற் போனது பாட்டு;
மயங்குமவ் வேளை மற்றொரு பாடல்
வியந்திட இசைத்தது விளங்கியது பொருளும்
வெள்ளிப் பனிமலை மீதுலவு வோமெனும்

தெள்ளிய பாடல் தேனென இனித்தது;
கற்கள் விழுந்தன கலகம் விளைந்தது
பற்பல விளக்குகள் பரவிச் சிதறின;
இசையும் நின்றது; ஏனென வினவினேன்;
'இசைவலார் பிறமொழிப் பாடல் இசைத்தலாற்
சினந்தெழு வோரிது செய்தனர்' என்றனர்;
இனைந்துளம் வெதும்பி மொழிவெறி யென்றேன்;
தடித்த கையை மடக்கி என் முகத்திற்
கொடுத்தனர் குத்து, குருதி வழியச்
சிதறின பற்கள்; திடுக்கிட் டெழுந்தேன்

உதடுகள் பற்கள் உருக்கெடா திருந்தன;
தாய்மொழிப் பற்றின் தகைமை உணர்ந்து
வாயிதழ் அசைந்தன வாழிய எனவே.

 

(13-5-1987)