பக்கம்:தாய்மொழி காப்போம்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவியரச முடியரசன்

41



28. தமிழர் போக்கு

தமிழ்நாட்டின் சிறப்பனைத்தும் புகல்வ தென்றால்
தனிப்பிறவி எடுத்தவர்க்கும் இயலா தாகும்;
அமிழ்துாற்றும் தமிழ்க்குறளின் பெருமை சொல்ல
ஆயிரம்நா போதுவதோ? போதா வாகும்;
தமிழ்காட்டும் பண்பனைத்தும் நாமே சொல்லித்
தற்பெருமை கொள்ளவிலை; உலக மெல்லாம்
இமைகூட்ட மனமின்றி விழித்து நோக்கி
எண்ணரிய வியப்பெய்திப் போற்றக் கண்டோம்.

ஆனாலும் நாம்மட்டும் அறிந்தோ மல்லோம்
அறிந்தாலும் வாய்திறந்து புகழ்ந்தோ மல்லோம்
போனாலும் போகட்டும்; மற்றோர் யாரும்
புகழ்ந்தாலும் ஒருசிறிதும் பொறுப்ப தில்லை;
தானாகக் கதைதிரித்து மறுப்புக் கூறித்
தரியலர்போல் இகழ்ந்துரைத்து வாழ்ந்து செல்லும்
கூனான மனமுடையார் சிலரும் நம்மில்
[1]'குடிலர்களாய் வாழ்கின்றார் உண்மை உண்மை.

நல்லுள்ளங் கொண்டவர்தாம் தமிழ்மொ ழிக்கு
நன்மைசெய முற்படுங்கால் வாழ்த்தல் வேண்டும்;
அல்லுள்ளங் கொண்டவரோ மாறாய்ப் பேசி
அவர்திறமைக் கேற்றபடி எள னங்கள்
சொல்லுவதிங் கியல்பாகக் கொண்டார்; அந்தத்
துயவருந் தமிழினமாம்; பழித்து ரைக்கும்
புல்லுள்ளங் கொண்டவர்க்கும் தமிழே தாயாம்;
புரியாராய் ஏசுகின்றார் அவர்தம் தாயை.

பேருந்து வண்டிகளிற் குறளைக் கண்டால்
பேருவகை தமிழ்நெஞ்சிற் பொங்க வேண்டும்;
யாரந்தக் குறளெழுத முனைந்தா ரோஇங்
கெவர்மனத்துத் தோன்றியதோ என வியந்து
பாரெங்கும் அவர்பெயரை வாழ்த்த வேண்டும்
பைந்தமிழ்க்கு நற்காலம் வந்த தென்று;
யாரிங்கு வாழ்த்துகின்றார்? பொல்லாங் கன்றோ
யார்யாரோ புகல்கின்றார் பித்தர் போல;


  1. (குடிலன் - அடுத்துக் கெடுக்கும் ஓர் அமைச்சன்)