பக்கம்:தாய்மொழி காப்போம்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

தாய்மொழி காப்போம்



விரைந்து செலும் உந்துகளுக் காங்கி லத்தில்
வைத்திருந்த பெயர்மாற்றித் தமிழில் நன்கு
வரைந்ததிருக் கைகளைநான் வாழ்த்து கின்றேன்
வளர்தமிழின் வளர்ச்சியிலே விரைவு கண்டே;
விரிந்தமதி யான்உரைத்தான் விரைவு வண்டி
விறகுவண்டி எனச்செவியில் விழுந்த தென்றே;
திரிந்தவற்குச் செவிபழுதாய் விட்ட தென்றால்
செந்தமிழைப் பழிப்பதற்கா முயல வேண்டும்?

எங்கெங்குக் காணினுமே தமிழ்தான் என்ற
இயல்புநிலை இங்குவர வேண்டு மென்று
பொங்குகிறோம்; ஓரிரண்டு நிலையி லேனும்
பூத்துளதே தமிழென்று மகிழ்கின் றோம்நாம்;
மங்கியவர் எள்ளிநகை யாடு கின்றார்;
மல்லிகைப்பூ [1]வராகத்தால் நுகர்தல் உண்டோ?
இங்கிவர்தாம் திருந்திவரும் நாள்தான் என்றோ?
இனியதமிழ் இகழ்வதுவா கட்சி யாகும்?

தாய்மொழியை வளர்ப்பதிலே கட்சிப் பூசல்
தலைகாட்டல் கூடாது; தமிழர் யார்க்கும்
தாய்மொழியை வளர்ப்பதிலே உரிமை யுண்டு;
தந்தம்மால் இயலும்வரை முயல வேண்டும்;
தாய்மொழியை வளர்ப்பதிலே சாதி வேண்டா
சாதியினைப் புகுத்துவது சதியே யாகும்;
தாய்மொழியை வளர்ப்பதிலே சமயம் வேண்டா
சமயம்வரின் மொழியழியுஞ் சமயந் தோன்றும்.

(விரைவு வண்டி என்று மாற்றி அமைத்ததை விறகு வண்டி என முன்னாள் அமைச்சர் ஒருவர் எள்ளி நகையாடியதைக் கடிந்து பாடியது)

 
  1. (முன்னாள் அமைச்சர் பெயர் மறைந்துள்ளது அறிக)