பக்கம்:தாய்மொழி காப்போம்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவியரச முடியரசன்

47



32. சமயத்தில் நட்டதமிழ்

அருளப்பன் என்னும் பேரான்
அப்துல்லா வானான் கண்டாய்!
கருப்பணன் என்பான் இங்கே
கபூரென ஆகி விட்டான்;
விருப்புள பொன்னன் கூட
விஜயனாய் மாறி விட்டான்;
வெறுப்புற ஜெகந்நாத் தானான்
வெள்ளையன் அந்தோ அந்தோ!

செல்லப்பன் இயல்பு மாறி
ஜீவபந்த் தாகி விட்டான்;
நல்லப்பன் கெட்டே போனான்
நண்ணினான் ஸ்ரீபா லாக;
சொல்லுக்கோர் அழகன் இங்கே
சொக்கினான் ஜோசப் பானான்;
அல்லலுக் காளாய் நின்றான்
அந்தோணி யானான் மெய்யர்.

தைத்திங்கள் பிறக்கும் நாளைத்
தமிழ்மகன் சங்கி ராந்தி
வைத்திங்குக் கூவி நின்றான்;
வளரிளஞ் சிறுவ ரெல்லாம்
மொய்த்திங்குக் கூடி ஆட
முயல்மகார்நோன்பை கூடக்
கைத்ததென் றொதுக்கி விட்டான்
கழறினான் தசரா என்றே.

திருமறைக் காடென் றோதும்
தீந்தமிழ்ப் பெயரும் செல்ல
வருமொழி வேதா ரண்யம்
வந்தது; வளங்கள் யாவும்
மருவிடும் தமிழின் அண்ணா
மலையெனும் பெயரும் மாறி
அருணமும் கிரியு மாகி
அய்யவோ ஓங்கிற் றம்மா!