பக்கம்:தாய்மொழி காப்போம்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

தாய்மொழி காப்போம்



வடமொழி ஒன்றே ஏற்பர்
வண்டமிழ் ஏலா ரென்றால்
கடவுளர் உருவக் கல்லைக்
கடலிடை வீச லன்றி
இடமுடைக் கோவி லுக்குள்
இன்னுமேன் வைத்தல் வேண்டும்?
மடமிகு மதிய ரானீர்
வந்தவர் ஏறிக் கொண்டார்.

கல்லினைக் கடவு ளாக்கிக்
கைத்திறன் காட்டுஞ் சிற்பி,
கல்லொடு கல்ல டுக்கிக்
கோவிலைக் கட்டுங் கொற்றன்,
கல்லினை மண்ணைச் சாந்தைக்
களத்தினிற் சுமக்குஞ் சிற்றாள்
செல்லவுந் தடையாம் செய்த
சிலைகளைத் தொட்டால் தீட்டாம்.

மாந்தரைத் தடுத்த போது
மடமையாற் பொறுத்துக் கொண்டீர்
தீந்தமிழ் மொழியை நம்மை
ஈன்றருள் தாயைத் தீயர்
போந்தவர் தடுக்கும் போதும்
பொறுமையா காட்டு கின்றீர்?
மாந்தரென் றும்மை யெண்ண
மனமிகக் கூசு கின்றேன்.

தன்மதிப் பிழந்தீர் வேதர்
தாளிணை வருடி நின்றீர்
நன்மதி திரிந்து கெட்டீர்
நால்வகை 'வருண தர்மம்'
பன்னுதல் நம்பி ஏய்ப்போர்
பகட்டுரைக் கடிமை யானீர்
இந்நிலை தெளியா தின்னும்
இருட்டினில் உழலு கின்றீர்