பக்கம்:தாய்மொழி காப்போம்.pdf/8

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கொள்கை வாள்!

இனமானச்செம்மல் புலவர் இளஞ்செழியன் எம்.ஏ.,

“தாய்மொழி காப்போம்” என்ற
தண்டமிழ்க் கவிதைக் காட்டுள்,
தோய்ந்ததென் உள்ளம்! சங்கத்
தொகைநூலைப் படிப்பதைப்போல்
பாய்ந்ததென் விழிகள்! பாட்டின்
பகர்பொருள் யாவற் றையும்
ஆய்ந்ததென் அறிவு! ஆகா,
அற்புதம் கவிஒவ் வொன்றும்!


முடியா சாயி ருந்த
முத்தமிழ்க் கவிஞர், பாடி
முடிக்கா தெதுவும் இல்லை!
முழுவதும் தமிழைக் காக்கும்
அடிகளே யாகும்! கையால்
ஆகாத தமிழர்க்கெல்லாம்
தடியடி தருகின் றாரே,
தரும்ஒவ்வொர் கவிதை தோறும்!


செந்தமிழ்க் கவிஞர், செப்பும்
சேதிகள் சிலிர்க்க வைக்கும்!
இந்தியை எதிர்க்கும் பாடல்
இப்போதே கிளம்ப வைக்கும்!
வந்ததைக் கவிதை யாக்கும்
வரம்பிலார் நடுவில், யாப்புச்
சந்தனக் கவிஞர், அன்னார்
சங்கத்துப் புலவர் என்பேன்.