பக்கம்:தாய்மொழி காப்போம்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவியரச முடியரசன்

57



38. அதன் பெயர் என்ன?

பிறந்தவர் அனைவரும் மனிதர் - ஆனால்
பிரிவுகள் அவருளும் உண்டு
சிறந்தவர் எனச் சிலர் வாழ்வர் - சீர்
குறைந்தவர் எனச்சிலர் தாழ்வர்.

கனிபவை யாவுங் கனிகள் - ஆனால்
கழிப்பன அவற்றுளும் உண்டு
இனியன எனச் சில கொள்வார்- சுவை
இல்லன எனச்சில கொள்ளார்.

காய்ப்பன யாவுங் காய்கள் - ஆனால்
கறிக்குத வாதன வுண்டு
பேய்ச்சுரை கொள்பவர் உண்டோ - அந்தப்
பேதைமை எவரிடங் கண்டோம்?

பிறப்பன யாவுங் குழந்தை - என்று
பேசுவ தெப்படிப் பொருந்தும்?
உறுப்புகள் உடம்பினில் இன்றிப் - பிறந்தால்
உண்மையில் அதன் பெயர் என்ன?

எழுதிய வெல்லாங் கவிதை - என்றால்
எங்ஙனம் ஒப்புவ ததனை?
பழுதுகள் அடைந்தன உறுப்பு - பின்னும்
பாவெனச் சொல்வதா சிறப்பு?