பக்கம்:தாய்மொழி காப்போம்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

தாய்மொழி காப்போம்



பொன்விளைந்த களத்தூரன் வெண்பாப் பாடிப்
புகழேந்தும் ஒருகவிஞன் தமிழுக் காக்கம்
முன்விழைந்து நூல்செய்து காலங்கண்ட
முத்தமிழ்க்குத் தொண்டுசெயும் கவிஞ ரெல்லாம்
என்விழைவுக் கிலக்கானோர்; அவர்தம் பாட்டின்
இனிமைக்கும் தனிமைக்கும் அடிமை யானேன்;
இன்பளைந்த அவர்திறத்தை நுவலக் கேட்பின்
என்பெல்லாம் நெக்குருக மகிழும் உள்ளம்.

மாசகன்ற வீணையென வெம்மை நீக்க
மாலைவரும் மதியமென, உளஞ்சி லிர்க்க
வீசுகின்ற தென்றலென, உயிர்கள் வேட்கும்
வீங்கிளமை வேனிலென, மலரில் வண்டு
மூசுகின்ற பொய்கையென உவமை சொல்லி
முழுமுதலை விளக்கிநின்ற நாவின் வேந்தன்
பேசுகின்ற தமிழ்ப்பாட்டால் இறையைக் காட்டும்
பெரும்புலவன் கவராத உள்ளமுண்டோ?

கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் நல்ல
குளிர்தருவாய். தருநிழலாய், நெஞ்ச மென்னும்
மேடையிலே வீசுகின்ற தென்றற் காற்றாய்,
மென்காற்றின் விளைசுகமாய் கருணை என்னும்
ஓடையிலே ஊறிவரும் தெண்ணீ ராகி
உகந்தமண மலராகி, சிறுவ னாக
ஆடையிலே எனைமணந்த இராம லிங்க
அடிகளவர் உளங்கவர்ந்த வள்ள லாவர்.

பாமரராய் விலங்குகளாய்ப் பான்மை கெட்டுப்
பகுத்தறிவும் அற்றவராய்ப் பிறந்த நாட்டைப்
பூமிதனில் அயலவர்க்கே அடிமை யாக்கிப்
புழுவினைப்போல் பூச்சியைப்போல் கிடந்த நாளில்
தேமதுரத் தமிழ்ப்பாட்டால் புரட்சித் தீயைத்
திசையெல்லாம் மூட்டியவன் உரிமை எல்லாம்
நாமடைய வேண்டுமென்ற உணர்வு தந்த
நற்கவிஞன் எனதுள்ளம் கொள்ளை கொண்டான்;