பக்கம்:தாய்மொழி காப்போம்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவியரச முடியரசன்

65



தென்னாட்டின் விடுதலைக்கே வாழ்வு தந்தோன்;
தீந்தமிழின் உரிமைக்கே பாடல் தந்தோன்;
இந்நாட்டில் பிறமொழிகள் படையெ டுத்தால்
எழுந்தார்க்கும் பாவேந்தன் எதிரி கோடிப்
பொன்காட்டி யழைத்தாலும் இகழ்ந்து தள்ளிப்
புகழ்மிக்க தமிழினத்தின் மேன்மை காக்கத்
தன்பாட்டைப் படைத்தளித்தோன் என்றும் மாறாத்
தன்மான இயக்கத்தான் உளங்க வர்ந்தான்;

எளிமைக்குப் பிறப்பிடமாய், இனிய சொல்லின்
இருப்பிடமாய் ஆசையிலா மனத்த னாகி,
ஒளிமிக்க புத்தனுக்கும் பார சீக
உமருக்கும் புகழோங்கும் வண்ணம் செய்த
களிமிகுத்த பாவலனாய்ச், சிறுவர் உள்ளம்
கனிவிக்கும் கவிமணியாய், உண்மை நேர்மை
தெளிவிக்கும் ஓருருவாய் வாழ்ந்த எங்கள்
தென்புலத்தான் திருவடியை நெஞ்சிற் கொள்வேன்.

எத்துணைதான் இடுக்கண்கள் நேர்ந்த போதும்
எதிர்த்தெழுந்து நகைத்துநின்று வெற்றி கண்ட
முத்தமிழ்க்குப் புகழ்படைத்த புலவர் பல்லோர்
முன்னாளில் வாழ்ந்திருந்தார்; என்றன் உள்ளம்
நத்துகின்ற புலவர்சிலர் பெயரை இன்று
நாம்நினைதல் நலம்பயக்கும்; நினைந்து வாழ்த்தும்
அத்திறத்தால் தமிழ்காக்கும் எண்ணம் நெஞ்சில்
அரும்புவிடும்; மலராகும்; மணம்ப ரப்பும்.

 

குன்றக்குடி கவியரங்கம் - 16.1.1965