பக்கம்:தாய்மொழி காப்போம்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவியரச முடியரசன்

v



'ஐக்கூ'என் றாடு வோரை
'அடிமைகள்' எனக்கு றித்தார்.
மைக்குழல் தமிழ்ப்பெண் ணாள்மேல்
மலையென மனம்கு வித்தார்!
தைக்கவே எழுது கின்ற
தனித்திறன் என்னே! என்னே!
வைக்கவே முடிய வில்லை
வாசித்தேன் சுவாசித் தேனே!

உணவினை ஊட்டு தல்போல்
உணர்வினை ஊட்டு கின்றார்!
பணம்பண்ணப் பாடி டாத
பண்பாட்டுக் கவிஞர், நாளும்
கணந்தோறும் சிந்த னையால்
கவிதையாய் வாழ்ந்திட் டாரே!
மணந்திட்ட மரபு முல்லை!
மறைந்தது இன்று இல்லை!

பலரையும் பாட்டுக் குள்ளே
பாவலர் போற்று கின்றார்!
இலரையும் உளராய், அன்னார்
எழுத்துரு வாக்கும்! இந்தப்
புலவரைப் பின்தொ டர்வேன்!
போர்க்குணம் பெறுவேன்! எந்தக்
களரையும் கழனி யாக்கும்
கவிதைகள் தருவேன் நானும்!

வார்த்தைகள் அல்ல, தெற்கு
வரலாறு, மானம், வீரம்,
வார்த்தெடுத் துள்ளார் பாட்டில்!
வழிவழித் தமிழர் வாழ்வைச்
சேர்த்துச்சேர்த் தெழுது கின்றார்
சிந்திக்க வைக்கின் றாரே!
நேர்த்திகொள் வீணை செய்தே
நீட்டினார் என்று சொல்வேன்!