பக்கம்:தாய்மொழி காப்போம்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

தாய்மொழி காப்போம்



43. இளங்கோவடிகள்

கோவேந்தர் பெருங்குடியிற் பிறந்தும் நாட்டுக்
குடிமக்கள் காப்பியத்தைப் படைத்துத் தந்தான்;
மூவேந்தர் ஒற்றுமைக்கு வழியுங் கண்டான்;
முதலினமாம் தமிழினத்தின் வரலாற் றுக்கு
நாவேந்தும் புகழ்சேர்த்தான் சேர நாட்டு
நற்றமிழன்; பெண்ணினத்தின் பெருமை சொன்ன
பாவேந்தன்; தேனூற்றி வைத்த தைப்போல்
பாநூற்றும் தான்நோற்றும் பெருமை கொண்டான்.

சேவடியின் சிலம்பணியால் விளைந்து வந்த
சிலம்படியால் கற்பணங்கின் வரலாற் றுக்கோர்
கோவிலினைக் கட்டியவன்; அரசு வேண்டாக்
கோவடிகள்; முத்தமிழின் காப்பி யத்தால்
மூவரசர் வரலாறும் மொழிந்த மேலோன்
மொய்த்தபுகழ் எம்மவர்க்குத் தந்த நல்லோன்;
நாவரிசை பாவரிசை காட்டி எங்கள்
நற்றமிழ்க்குச் சுவைமிகுத்தான் வாழ்க நன்றே.