பக்கம்:தாய்மொழி காப்போம்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவியரச முடியரசன்

67



44. புரட்சிப் பாவலன்

ஒப்பரிய யாப்பென்னும் அணையைக் கட்டி
உணர்ச்சியெனும் பெரும்புனலைத் தேக்கி வைத்தான்;
அப்புனலுள் மூழ்கியதன் ஆழங் காணல்
அரிதெனினும் கரையோரம் நின்று கொண்டு
செப்புகின்றேன் சிலமொழிகள்; புதிய பாங்கில்
செய்தமைத்த பாட்டுக்குள் வெறியை ஏற்றும்
அப்பனவன் பரம்பரையில் நானோர் பிள்ளை
ஆதலினால் அவன் பெருமை பாடு கின்றேன்.

பயில்கின்ற நெஞ்சமெலாம் வண்டாய் மொய்க்கப்
பைந்தமிழ்த்தேன் சுவைநல்கும் முல்லைக் காடு;
மயில்திரியும் தென்பொதிகைக் குற்றா லத்து
மலையிறங்கும் தேனருவி; துன்ப மென்னும்
[1]மயலிரிய நம்முளத்தை இளமை யாக்கி
மகிழ்வுதரும் இசையமுது; பாட்டின் வேந்தன்
இயல்பினிலே அமைதியினன்; எழுச்சி கொண்டால்
இரணியன்தான்; எதிர்நிற்க எவரு மில்லான்

குருட்டுலகில் இருட்டறையில் வாழ்வோர்க் கெல்லாம்
குடும்பவிளக் கேற்றியறி வொளியைத் தந்தான்;
திருட்டுமனப் போக்கர்தமைச் செருக்க டக்கித்
தீந்தமிழை வளர்ப்பதற்கு வழியைச் சொல்லித்
தெருட்டுகிற தமிழியக்கம் ஒன்று தந்தான்;
தெரிகின்ற கதிர்திங்கள் மலர்க ளுக்குள்
உருக்கொண்டு சிரிக்கின்ற அழக னைத்தும்
உருவாக்கி நமக்களித்தான் உலகம் போற்ற.

கூத்தடிக்க நாடகநூல் தந்தா னல்லன்
கொள்கைக்கே நாடகங்கள் எழுதித் தந்தான்
பூத்தொடுத்த குழல்மடவார் தம்மைத் தாழ்த்தும்
புன்மைகளை மாய்ப்பதற்கு வீரம் மிக்க
பாத்திறத்தான் தமிழச்சி ஏந்துங் கத்தி
படைத்தளித்தான்; நினைந்துநினைந் துள்ளம் பொங்க
ஏத்தெடுக்கும் முத்திரையாய் விளங்கும் வண்ணம்
எதிர்பாரா முத்தமொன்று தந்து வந்தான்.


  1. மயல் இரிய - மயக்கம் விலக.