பக்கம்:தாய்மொழி காப்போம்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

தாய்மொழி காப்போம்



காவியங்கள் எனும் பெயரில் நல்ல நல்ல
கருத்தெல்லாம் உள்ளடக்கி நிலைத்து நிற்கும்
ஓவியங்கள் பலதந்தான்! பரிசி லாக
உயர்பாண்டி யன்பரிசில் எனும் நூல் தந்தான்;
பூவிளங்கும் செழுந்தேனோ கரும்பின் சாறோ
புரட்சிக்கு நடும்வித்தோ என்று மக்கள் நாவியந்து
போற்றும்வணம் தொகுதி யாக
நல்லகவி மலர்தொடுத்து நமக்க ளித்தான்.

பாவேந்தன் தீப்பிழம்பின் வெம்மை சேர்த்துப்
படைத்தளித்த தீந்தமிழின் உணர்ச்சிப் பாட்டை
நாவேந்திப் பாடிவிடின் உடலி லுள்ள
நரம்பனைத்தும் முறுக்கேறும்; மொழிக ளெல்லாம்
[1]ஏவேந்திப் போர்தொடுக்கும்; விழிக ளெல்லாம்
எரிகக்கும்; தோள்விம்மும்; போரில் எந்தக்
கோவேந்தன் வந்தாலும் எதிர்த்து நிற்கக்
கொடுங்கோலைப் புறங்காண உணர்ச்சி நல்கும்

விழுதுவிட்ட ஆலமரம் சாதி என்றால்
வேர்பறியச் சாய்ந்துவிழச் செய்த பாட்டு;
பழுதுபட்ட கண்மூடிக் கொள்கை என்னும்
பழங்கோட்டை சரிந்துவிழச் செய்த பாட்டு;
தொழுதுகெட்ட தமிழினத்தார் நிமிர்ந்து நிற்கத்
துணிவுதனை உணர்ச்சிதனைத் தந்த பாட்டு;
பொழுதுபட்டுப் போனாலும் உணர்ச்சி பட்டுப்
போகாமல் நிலைத்திருக்கும் புலவன் பாட்டு.

தமிழ்மொழியைத் தமிழ்மகனைப் பழித்து ரைக்கும்
தருக்குடையார் முதுகெலும்மை நொறுக்கிக் காட்டும்
அமிழ்தனைய பாட்டுரைத்தான்; சினந்தெ ழுங்கால்
அன்னைவந்து தடுத்தாலும் விடவே மாட்டேன்
 நிமிர்ந்தெழுந்து போர்தொடுப்பேன் எனவெ குண்டு
நினைத்தாலும் மெய்சிலிர்க்கும் பாட்டு ரைத்தான்;
இமைகுவியா வீரத்தை எடுத்துக் காட்டி
எக்களிக்கும் போர்ப்பாட்டை நமக்களித்தான்.


  1. ஏவேந்தி - அம்பேந்தி