பக்கம்:தாய்மொழி காப்போம்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவியரச முடியரசன்

69



இருட்டறையில் உள்ளதடா உலகம் என்றான்;
இனியுலகம் விழித்தெழவே அவ்விருட்டை
வெருட்டுகின்ற வழிசொன்னான்; ஒளியுந் தந்தான்;
விளக்கெடுத்து வெளிச்சத்தால் உலகைக் காணத் தருட்கிற
தெருட்டுகின்ற பாட்டுரைத்தான்; அந்தப் பாட்டைத்
தெளிந்துணர மனமின்றிப் பாட்டிற் காணும்
கருத்தெடுத்துப் பரப்புதற்கு முயற்சி யின்றிக்
கண்மூடித் துயில்கின்றோம் உணர்வே இன்றி.

மழைபெய்தும் விளைவறியாக் களிமண் ணாக
வன்பாறை நிலமாகக் கிடக்கின் றோம்நாம்;
கழைபெய்த சாறிருந்தும் அதனை மாந்திக்
களிக்காமல் எதைஎதையோ பருகு கின்றோம்;
விழைவெல்லாம், பாவேந்தன் எண்ண மெல்லாம்
வெறுங்கனவாய்ப் பகற்கனவாய்ப் போவ தென்றால்
நுழைமதியன் பாவேந்தன் தனது நெஞ்சம்
நொந்தழிந்து போகானோ? நன்றே சொல்வீர்.

பாரதிக்குத் தாசன்தான் எனினும் அந்தப்
பாவலனை விஞ்சிநிற்கும் பாட்டு வேந்தன்
காருதிர்க்கும் மழைபோலப் பொழிந்த பாட்டுக்
கற்பனைக்கு நிகரேது? பாடல் தந்த
சாறெடுத்துக் குடித்தவர்தாம் உண்மை காண்பர்;
சாற்றிடுவர் அவனுலகப் புலவன் என்றே;
வேறெடுத்துக் குடித்தவரோ புழுதி வாரி
வீசிடுவர் மயங்கிமிகத் தூற்றி நிற்பர்.

வங்கத்திற் பிறந்திருப்பின், இலக்கி யத்தை
வளர்த்து வருங் கேரளத்திற் பிறந்திருப்பின்;
எங்கட்குத் தலைவனவன் மேலை நாட்டில்
எங்கேனும் பிறந்திருப்பின் அங்கு வாழ்வோர்
சிங்கத்தை நிகர்கவிஞன் புகழைப் போற்றிச்
சிறப்பனைத்தும் உலகெங்கும் செப்பிச் செப்பிப்
பொங்கித்தம் உளங்களிப்பர்; தன்னே ரில்லாப்
புலவனிவன் தமிழ்நாட்டிற் பிறந்து விட்டான்.