பக்கம்:தாய்மொழி காப்போம்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவியரச முடியரசன்

71



45.ஞாயிறு போற்றதும்

தென்பால் உளது, தேன்வளர் சாரல்
[1]மென்கால் உலவும் திண்கால் [2]ஆரம்
குதிதரும் அருவி மருவிய மாமலை
மதியந் தவழும் பொதியம் ஒன்று;
வடபால் உளது, வானுயர் கொடுமுடி
தொடருங் கருமுகில் படருஞ் சாரல்
உறைதருந் தண்பனி நிறைதரும் மாமலை
பரிதியை மறைக்கும் பனிமலை ஒன்று;
பெருமலை இரண்டும் ஒருமலை யாக்கக்
கருதிய ஒருசிலர் உறைபனி கொணர்ந்து
தென்றல் தவழும் குன்றின் தலையில்
அன்றவர் வைத்தனர்; அடடா என்றனர்;
பனியால் நடுக்குறும் பயனே கண்டனம்;
இனிய தென்றலும் எழில்நலங் குறைந்தது;
விடுத்தஅப் பனிதான் விரைந்திவண் விலக
நடுக்கிய பனியின் நலிவும் அகல
ஒரு நூற்றாண்டின் முன்னர் ஒருநாள்
மறைமலை என்னும் மறுபெயர் பூண்டு
கடலலை மோதும் கரைபெறும் மூதூர்
இடமகல் நாகை எனும் பெயர்ப் பட்டினத்
தெழுந்ததோர் ஞாயிறு கரைந்தது வெண்பனி;
தொழுதனர் மாந்தர் தோன்றுசெங் கதிரை;
இரியா இருளை இரியச் செய்வான்
பெரியார் அண்ணா பெரும்பணி புரிநாள்
இடையறா அப்பணி இடையூ றின்றி
நடைபெறப் பேரொளி நல்கிய தக்கதிர்;
இருளால் மறைபடும் இனமொழி உணர்வுகள்
தெரிதர லாயின தெளிந்தனம் யாமே;
தெளிந்தனம் ஆதலின் குழைந்துள பனியில்
விழுந்தினி அழியோம் விழிப்புடன் நடப்போம்;


  1. மென்கால் - தென்றல்
  2. ஆரம் - சந்தனமரம்