பாதிக்கப்பட்டு உயிரிழந்த கைதிகளுக்குக் கணக்கு வழக்கே இல்லை.
தாய்லாந்து பகுதியிலும் பர்மா பகுதியிலும் சேர்ந்து மொத்தம் நானூற்றுப் பதினைந்து கி.மீ. தூரம் நீண்டுள்ள இந்த ரயில் பாதையைப் பதினெட்டே மாதங்களில் போட்டு முடித்தனர்.
”உயிரிழந்த வீரர்கள் எத்தனை பேர் இருக்கும்?” என்று விசாரித்தேன்.
”இந்த ரயில்பாதைக்குப் போடப்பட்டுள்ள ஸ்லீப்பர் கட்டைகள் எத்தனையோ அத்தனை பேர்” என்று ஒரு கணக்குச் சொன்னார் கய்டு.
”மொத்தம் போடப்பட்டுள்ள ஸ்லீப்பர் கட்டைகள் எத்தனை?”
”எத்தனை வீரர்கள் உயிரிழந்தார்களோ, அத்தனை கட்டைகள்” என்றார் கய்டு!
ரயில் பாதை அமைக்கப்பட்ட போது க்வாய் நதி குறுக்கிட்டதால் அதன் மீது ஒரு பாலம் கட்ட வேண்டியதாயிற்று.
முதலில் தற்காலிகப் பாலமாகத்தான் அதைக் கட்டி முடித்தார்கள். அப்புறம் நிரந்தரமாகக் கட்டப்பட்ட பாலம்தான் இப்போது அந்த அப்பாவி ராணுவப் போர்க் கைதிகளுக்கு மெளன அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கிறது.
அந்தப் பாலத்தைச் சுற்றிலும் ஏராளமான டுரிஸ்ட் பஸ்களும் ஓட்டல்களும் கடைகளும் சூழ்ந்து நிற்கின்றன. ஐம்பது வருடங்களுக்கு முன் அந்த இடம் எப்படி இருந்திருக்கும் என்பதை நம்மால் ஓரளவு ஊகிக்க முடிகிறது.
ஒரு மரத்தடி நிழலில் உட்கார்ந்து அந்தப் பாலத்தை ‘ஸ்கெச்’ செய்து கொண்டிருந்தார் வெளிநாட்டு ஆர்ட்டிஸ்ட் ஒருவர். அதைச் சிறிது நேரம் வேடிக்கை பார்த்து முடிந்ததும், “சரி, எல்லாம் பார்த்தாச்சு; போக வேண்டியதுதானே?” என்று கேட்டேன் ஸ்ரீ வேணுகோபாலனிடம். அவர் தயங்கினார்.
பாலத்துக்குச் சற்று தூரத்தில் சாதுவாக ஒரு ரயில் என்ஜின் நின்று கொண்டிருந்தது.
காமிராவும் கையுமாக அலைந்து தம்முடைய சரித்திரக்
20