பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/364

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

348

மக்சீம் கார்க்கி


பிரதியாக அவனை நான் கவனிக்க வேண்டுமென்றோ அவன் கொஞ்சம்கூட, இம்மியளவுகூட, கேட்டதும் கிடையாது; எதிர்பார்த்ததும் கிடையாது....”

அவள் இகோரிடம் போய் அவனது கரத்தை முத்தமிடுவதற்காகக் குனிந்தாள்;

“தோழா: என் அன்பான, இனிய தோழனே! உனக்கு நன்றி. என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நான் உனக்கு நன்றி செலுத்துகிறேன்” என்று வருத்தத்துடன் மெதுவாகச் சொன்னாள். “நீ பிரிந்து போகிறாய். எப்பொழுதும் நீ உழைத்த மாதிரியே, ஓய்ச்சல் ஒழிவின்றி, நமது கொள்கையிலே சலனபுத்தியின்றி, என்னுடைய வாழ்க்கை முழுதும் நானும் உன்னைப் போல் உழைத்துக்கொண்டிருப்பேன். போய் வா, தோழனே!”

அவளது உடம்பு பொருமலினால் குலுங்கியது. தன் தலையை இகோரின் பாதங்களுக்கருகே வைத்துக்கொண்டாள். தாய் இடைவிடாது மௌனமாக அழுதுகொண்டிருந்தாள். என்ன காரணத்தினாலோ அவள் கண்ணீரை அடக்க முயன்றாள். லுத்மீலாவைத் தேற்ற பலமாகத் தேற்ற விரும்பினாள். இகோரைப் பற்றித் துயரமும் பாசமும் கலந்த அருமையான வார்த்தைகளைச் சொல்ல எண்ணினாள். கண்ணீரின் வழியாக அவனது அமிழ்ந்துபோன முகத்தை. அவனது கண்களை, முழுதும் மூடாது அரைக்கண் போட்டுத் தூங்குவது போல் தோன்றிய அவன். கண்களை, இளம் புன்னகை பதிந்து நின்ற அவனது கரிய உதடுகளை—எல்லாம் பார்த்தாள். எல்லாமே அமைதியாகவும் வேதனை தரும் ஒளி நிரம்பியதாகவும் இருந்தது.

இவான் தனிலவிச் வழக்கம் போலவே விடுவிடென்று உள்ளே வந்தான். திடீரென அந்த அறையின் மத்தியில் நின்றுவிட்டான், தனது கைகளை விறுட்டென்று டைகளுக்குள் சொருகிக்கொண்டு நடுநடுங்கும் உரத்த குரலில் கேட்டான்.

“இது எப்போது நிகழ்ந்தது?”

யாரும் பதில் சொல்லவில்லை. அவன் தன் நெற்றியைத் துடைத்துக் கொண்டான்; லேசாகத் தள்ளாடியவாறு இகோரின் பக்கம் நடந்து சென்றான். அவனிடம் கரம் குலக்கிவிட்டு ஒரு பக்கமாக ஒதுங்கி நின்று கொண்டான்.

“எதிர்பாராதது எதுவும் நடக்கவில்லை. இவனது இருதயம் இருந்த நிலைமைக்கு. இந்த மரணம் ஆறுமாதங்களுக்கு முன்பே நேர்ந்திருக்க வேண்டியது....குறைந்த பட்சம்.....”