பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/365

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

349



இடத்திற்குப் பொருந்தாத, ஒங்கிய, உரத்த அவனது குரல் திடுமென்று நின்றது.

அவன் சுவரோடு சாய்ந்து கொண்டு, தன் தாடியை விறுவிறுவென்று திருகித்திரித்தான்; அடிக்கடி கண் சிமிட்டியபடி படுக்கையருகே சூழ்ந்து நின்றவர்களையே பார்த்தான்.

“இவனும் போய்விட்டான்!” என்று அமைதியாகக் கூறினாள்.

லுத்மீலா எழுந்து ஜன்னலருகே சென்று அதைத் திறந்தாள். அவர்கள் எல்லோருமே சிறிது நேரத்தில் அந்த ஜன்னல் பக்கம் வந்து, ஒருவருக்கொருவர் நெருங்கி நின்று இலையுதிர்கால் இரவின் முகத்தை வெறித்து நோக்கினார்கள். மரவுச்சிகளுக்கு மேலாக விண்மீன்கள் மினுமினுத்தன. நட்சத்திரக் கூட்டம் வான மண்டலத்தின் ஆதியந்தமற்ற விசாலப் பரப்பையும் விரிவையும் அழுத்தமாக எடுத்துக் காட்டியது.

லுத்மீலா தாயின் கரத்தைப் பற்றி எடுத்தாள்; வாய் பேசாமல் அவள் தோள்மீது சாய்ந்தாள். டாக்டர் தலையைக் குனிந்து, தனது மூக்குக் கண்ணாடியைத் துடைத்தவாறே நின்றார். ஜன்னலுக்கு வெளியே பரந்து கிடக்கும் அமைதியின் வழியாக, நகரின் ஒய்ந்து கலைத்துப்போன இரவின் ஓசைகள் கேட்டன. குளிர் அவர்களது முகத்தைத் தொட்டுத் தடவி, தலைமயிரைக் குத்திட்டுச் சிலிர்க்கச் செய்தது. லுத்மீலா தனது கன்னத்தில் ஒரு துளி கண்ணீர் வழிந்தோட, உடல் எல்லாம் நடுங்கினாள். வெளியே வராந்தாவிலிருந்து உருவமற்ற பயபீதிச் சத்தங்களும், அவசர அவசரமாகச் செல்லும் காலடியோசையும். முக்கலும் முனகலும் ஒலித்தன. எனினும் அவர்கள் மூவரும் வாய் பேசாது சலனமற்று அந்த ஜன்னல் அருகிலேயே நின்று இருளை வெறித்து நோக்கியவாறு இருந்தார்கள்.

தான் அங்கிருக்கத் தேவையில்லை என்று உணர்ந்த தாய், அவளது பிடியிலிருந்து விடுபட்டு விலகி வாசலுக்கு வந்தாள்; அங்கு நின்றவாறே அவள் இகோருக்கு வணக்கம் செலுத்தினாள்.

“நீங்கள் போகிறீர்களா?” என்று எங்குமே பார்க்காமல் அவளை அமைதியாகக் கேட்டார் டாக்டர்.

“ஆமாம்...”

தெருவுக்கு வந்தவுடன் அவள் லுத்மீலாவைப் பற்றியும் அவளது அடங்கிப்போன அழுகையைப் பற்றியும் எண்ணிப் பார்த்தாள்.

“அவளுக்கு எப்படி அழுவது, என்று கூடத் தெரியவில்லை....”

சாவதற்கு முன்னால் இகோர் பேசிய வார்த்தைகள் நினைவுக்கு வரவும் ஓர் ஆழ்ந்த பெருமூச்சு அவள் வாயைப் பிளந்துகொண்டு