சு. சமுத்திரம் 95
சரோசாவை எப்படியாவது விட்டுவிட வேண்டும் என்று இந்த சப்-இன்ஸ்பெக்டரை கரும்பு மாமூல் கான்ஸ்டபிள் நச்சரித்துக் கொண்டிருக்கிறார். பதவி ரீதியில் இவர் அவருக்கு முதலாளி, ஆனால் மாமூல் விவகாரத்தில் அவர் இவருக்கு முதலாளி.
இன்ஸ்பெக்டர், சரோசா விவகாரத்தை விட்டு விட்டு, இன்னொரு விவகாரம் கொண்ட எப் ஐ ஆர் ஐ படிக்கத் துவங்கினார். சரோசாவை கிட்டத்தட்ட மறந்தே விட்டார். அப்போது :
“சார், இதோ சரோசா.” “ஏய், ஒன் பேரு சரோஜாவா? சரோசாவா?”
“நீங்க கடைசியா சொன்ன சொல்லு வரமாட்டேங்குதே சாரே. போலீஸ் எங்களோட தோஸ்துன்னு பேரு. அப்படியும் என்னை இந்தப் பாடு படுத்திட்டாங்களே. கடவாப்பல்லு ஆடுது சாரே, கையி பிசகிட்டு சாரே.”
முகம் வீங்கி, கை வளைந்து, உடம்பை உண்மையிலேயே காயம் என்று சொல்லலாம் என்று சொல்வதுபோல் காயப்பட்டு நின்ற சரோசாவை, இன்ஸ்பெக்டர் பற்றற்ற முறையில் பார்த்தபோது, எங்கிருந்தோ ஓடிவந்த கரும்புக்கார போலீஸ்காரர் அவளுக்கு உபதேசம் செய்தார் :
“ஏய், சரோ இந்த மாதிரியா இன்ஸ்பெக்டர் ஐயா கிட்டே பேசறது? நானும் சப்-இன்ஸ்பெக்டர் ஐயாவும் சொன்னதுக்காக ஐயா, ஒன்ன விடுதலை செய்யறார். இன்ஸ்பெக்டர் ஐயா டெப்டி கமிஷனர்கிட்ட உனக்காக வாதாடி. போராடி ஒன்ன கொலை கேஸிலிருந்து விடுவிச்சிருக்கார்.”
“அதுக்காக கொழந்தைய கடத்திட்டுப் போன நிசமான கேடிய விட்டுடாதீங்க சாரே.”