க. சமுத்திரம் 157
“அது அண்ணாத்தையோட விஷயம். அவர் என்ன சொல்றாரோ அதைச் செய்றதுக்குத்தான் நாம இருக்கோம். ஒருவேளை எதாவது முறிவு மாத்திரை போட்டுக்கூட அண்ணாத்தே மாயாஜாலம் செய்யலாம். உனிக்கி இன்னாமே வந்தது?”
“துரை அண்ணே! துரை அண்ணே ஒன்னை கையெடுத்துக் கும்பிடறேன்; எனிக்கி இந்தத் தொழில் வேணாம்; என்ன விட்டுடு, விட்டுடு.”
சரோசா, அந்தக் காரை காலால் ஒரு உதை உதைத்துவிட்டு, தலைவிரி கோலமாக ஓடினாள்.
ஐந்தாறு நாட்கள் அடங்கி, ஆறாவது நாள் துவங்கியது.
இந்த இடைவெளிக்குள், இளங்கோவுக்கு வேண்டியவர்கள் எல்லோருமே அவனைப் பார்த்துவிட்டார்கள். பெற்றோர், உற்றோர், அலுவலக சகாக்கள் அனைவரும் அவனுக்கு ஏற்பட்ட ‘விபத்தை தலைக்குப் பதிலாக தலைப்பாகையோடு போனதாய் நினைத்துக் கொள்ள வேண்டும் என்றார்கள். அவனுடைய அம்மா கிட்டத்தட்ட அங்கேயே கிடந்தாள். எல்லோரையும்விட அலறி அடித்து, அவனை முதல் தடவையாய் மருத்துவமனையில் பார்த்த பாமாவும் அங்கேயே தவம் கிடப்பதுபோல் கிடந்தாள். ஆனால் பாக்கியம் பார்த்த பார்வையில் லேசாய் ரோஷப்பட்டு, இப்போது தாய்க்காரி இல்லாத சமயமாய் பார்த்து வந்து கொண்டிருக்கிறாள். அவளுக்கு மட்டும், இளங்கோவுக்கு ஏற்பட்டது விபத்தா அல்லது ஆபத்தா என்கிற சந்தேகம் இன்னும் போகவில்லை. அப்படி