158. தாழம்பூ
ஏடாகூடமாக ஏதாவது நடந்திருந்தால் இளங்கோ சொல்லி இருப்பார் என்ற நம்பிக்கை; அப்படியான ஒரு உரிமை.
அந்த மாடிக்குக் கீழே வரவேற்பு வளையத்திற்குள் நோஞ்சானின் தயவில், சரோசா தன்னை மறைத்துக்கொண்டு காத்துக் கொண்டிருந்தாள். மேலே பாமா போயிருக்கிறாள். அவள் போன பிறகுதான், இவள் போக வேண்டும். அரைமணி நேரத்திற்குப் பிறகு பாமாவும், நோஞ்சான் பாணியில் சொல்லப்போனால் அவளுடைய கிடாத்தலை அப்பன் மிஸ்டர்.ரமணனும் கீழே படியிறங்கினார்கள். சரோசா, தலையை குனிந்துகொண்டாள். அவர்கள் மருத்துவமனையை விட்டு மறைந்ததும், அவளுடைய தலை வரவேற்பு வட்டத்திற்கு மேல் மூன்றடி உயரத்தில் எழுந்தது. வழிகொடுக்கும் சாய்வுப் பலகையை நிமிர்த்திக் கொண்டு, வெளியேறி மாடிப்படிகளில் ஏறினாள். இதற்குள், அவனை, அவள் மூன்று நான்கு தடவை பார்த்து விட்டாள். அவனிடம் கெஞ்சிக் கூத்தாடி மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று அவள் பேச நினைக்கும்போதெல்லாம், பார்வையாளர்கள் வந்துவிடுவார்கள். அவர்களது ஆடை ஆபரணங்களைப் பார்த்துவிட்டு, இவளே தனக்குள் கூசிக்கொண்டு வெளியே வந்துவிடுவாள்.
சரோசாவின் உருவம் வாசலில் தெரிந்தவுடனேயே, இளங்கோ அவளை அடையாளம் கண்டு “வா சரோசா” என்றான். அவளும் சொல்லப் பொறுக்காதவளாய் அந்த அறைக்குள் தாவினாள். அவன் முகத்தைப் பார்த்தாள். நெற்றிப்பொட்டின் வீக்கம் குறைந்திருந்தது, காதைப் பார்த்தாள், பிளாஸ்திரி இன்னும் எடுக்கப்படாமல் இருந்தது. ஒரு கை, இப்போதும் ஒரு மாதிரி தெரிந்தாலும், அது துள்ளியில் தொங்கப்போடாமல், அவன் மடியில் கிடந்ததில், அவளுக்கு மகிழ்ச்சி.