பக்கம்:தாழ்வு மனப்பான்மை.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

தாழ்வு மனப்பான்மை

யின் போக்கை அமைப்பதில் பிரதானமான இடம் வகிக்கிறது என்றும் கூறினார்.

ஆண் பெண் கலவி சம்பந்தமாக ஏற்படும் அவாவை 'இணைவிழைச்சு' என்ற பெயரால் சங்க காலத்திலேயே தமிழர்கள் வழங்கி வந்துள்ளார்கள். பாலுணர்ச்சி என்ற சொல்லுக்கு இணைவிழைச்சு என்ற பொருளோடு இன்னும் விரிவான பொருளை பிராய்டு முதலியோர் கொடுத்திருக்கிறார்கள். குழந்தைப் பருவத்திலேயே இந்தப் பாலுணர்ச்சி வலிமையோடிருப்பதாக பிராய்டு கூறுகிறார். அதுவே வெவ்வேறு வடிவங்களில் மனிதனுடைய வாழ்க்கையில் முக்கிய அம்சமாக நின்று அவனுடைய வாழ்க்கையின் போக்கை நிருணயிக்கிறது என்பது அவர் கண்ட முடிவு. பிராய்டு இந்தப் பாலுணர்ச்சிக்கு லிபிடோ என்று பெயர் கொடுத்தார். அவருடைய மனப்பகுப்பியல் கொள்கையின்படி லிபிடோதான் தலைமை ஸ்தானம் வகிக்கிறது. அதுவே மனிதனுடைய வாழ்க்கை அமைப்பைத் தீர்மானம் செய்கிறது.

பாலுணர்ச்சிக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதை ஆட்லர் ஆமோதிக்கவில்லை. மனத்தில் உண்டாகும் கோட்டங்களுக்கும், ஒருவனுடைய வாழ்க்கையில் ஏற்படும் கோளாறுகளுக்கும் பாலுணர்ச்சியே அடிப்படை என்றும், அதிலிருந்தே அவை முளைக்கின்றன என்றும் பிராய்டு வற்புறுத்துவதை ஆட்லர் ஒப்புக்கொள்ள மறுத்தார். பாலுணர்ச்சியால் ஏற்படும் சிக்கல்களை அவர் ஏற்றுக்கொண்டாலும், அதுவே அடிப்படையாக வாழ்க்கையின் போக்கிற்கே காரணம் என்பதை அவர் சரியெனக்கருதவில்லை.

வாழ்க்கையின் போக்கை அமைப்பதில் தலைமை ஸ்தானம் வகிப்பது 'உயர்வுந்தல்' என்று அவர் கூறினார்.