பக்கம்:தாவிப்பாயும் தங்கக் குதிரை.pdf/36

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

நோக்கித் தேன்கதலி நாட்டரசன், அவர்கள் எதற்காக அங்கு வந்தார்கள் என்று கேட்டான்.

அசே, தங்கள் நாட்டில் தங்கக் குதிரை ஒன்று இருப்பதாகக் கேள்விப்பட்டோம்.அதை எங்கள் நாட்டுக்கு எடுத்துச் செல்லவே இங்கு வந்தோம்” என்று உறுதி குன்றாத குரலில் மறுமொழி கூறினான் வெற்றிவேலன்.

“வீரனே, தேவர்களே நெருங்கப் பயப்படுவார்கள் அந்தத் தங்கக் குதிரையை இன்ப வள நாட்டிலிருந்து எங்கள் பாட்டனை ஏற்றிக் கொண்டு வந்தது அந்தத் தங்கக் குதிரை. அதை அடைபவன் உண்மையிலேயே பெரும் வீரனாக இருக்க வேண்டும். நீங்கள் அதை அடைவது அரிது என்றே நான் நினைக்கிறேன்” என்றான் அரசன்.

“அரசே, தங்கக் குதிரையில்லாமல் தாயகம் செல்வதில்லை” என்ற உறுதியான முடிவுடன் வந்திருக்கிறேன். எப்படியும் அதை அடைந்தே தீருவேன்” என்றான் வெற்றிவேலன்.

“வீர இளைஞனே, உன் உறுதியை நான் போற்றுகிறேன். ஆனால், அது வீரம் ஒன்றினால் மட்டும் அடையக் கூடியதல்ல. நான் சொல்லும் மூன்று அருஞ்செயல்களைச் செய்து முடித்தால்தான் அந்தப் பெருமைக்குரிய தங்கக் குதிரை கிடைக்கும்” என்றான் அரசன்.