உக்கிரீய (Ugrian) மொழிகளுடன், உள்ள உறவடையாளங்கள் மொத்தத்தில் மிக நெருங்கியும் மிகத் தெளிவாயும் மிகமுக்கியமாயும் காண்கின்றன என்பதே."
(-. -. - ப. 452)
கால்டுவெல் கண்காணியார் மேற்கூறியவாறு திரவிட மொழிகளை, சிறப்பாகத் தமிழை, ஆராய்ந்து பல உண்மைகளைக் கண்டாரெனினும், தொல்காப்பியத்தையும், கழக (சங்க) நூல்களையுங் கல்லாமையாலும், குமரிநாட்டு வரலாற்றை அறியாமையாலும், தமிழின் திரவிடத் தாய்மையைக் காணாததுடன், திரவிட நாகரிகத்தை ஆரிய நாகரிகமாகப் பிறழக் கொண்டு சில தனித் தமிழ்ச் சொற்களையும் வடசொற்களாகக் கூறிவிட்டனர். ஆயினும், கழகநூற் பயிற்சியும் தனித் தமிழுணர்ச்சியும் இல்லாத அக்காலத்தில் அயல்நாட்டாரான அவர் ஆரியத்தினின்று திரவிடத்தைப் பிரித்துக் காட்டின அத்துணையே மிகச் சிறந்ததென்று கொண்டு பெருமகிழ்ச்சியுடன் அவருக்கு என்றும் நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம்.
தமிழில் - திரவிடச் சொற் பாகுபாடு
தமிழல்லாத பிற திரவிடச் சொற்களெல்லாம், 1.செந்தமிழ்ச் சொற்கள், 2 கொடுந்தமிழ்ச் சொற்கள், 3.வடசொற்கள் என மூவகைப்படும்.