பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/101

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அவா அறுத்தல்

91


சார்பு (1) - ஆதாரம், கடவுள்; சார்பு (2) - பற்று; சார்தரா - அடைய மாட்டா; நோய் - வினைப் பயனால் வரும் துன்பம். 359

10.காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.

விருப்பு, வெறுப்பு, அறியாமை ஆகிய இம்மூன்று குற்றங்களின் பெயரும் அழியும்படி ஒழுக வல்லவர்களுக்குத் துன்பங்கள் அனைத்தும் வாராமல் ஒழிந்து போகும்.

காமம் - விருப்பு; வெகுளி - வெறுப்பு; மயக்கம் - அறியாமை; நாமம் - பெயர். 360

37. அவா அறுத்தல்


1.அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து.

எல்லா உயிர்கட்கும் எப்போதும் ஒழியாத பிறவியை உண்டாக்குவதற்குக் காரணமாக இருப்பது அவ்வுயிர்கள் உலகப் பொருள்களின் மீது வைத்துள்ள ஆசையே என்று கூறுவர்.

அவா - ஆசை அல்லது பற்று; எஞ்ஞான்றும் - எக்காலத்தும்; தவா - கெடாத, விட்டு நீங்காத, ஒழியாத; வித்து - விதை, காரணமாக இருப்பது. 361

2.வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை; மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.

ஒருவன் ஒன்றை விரும்ப வேண்டுமானால், பிறவாதிருத்தலையே விரும்புதல் வேண்டும். அப்பிறவாமை ஆசையற்ற நிலையினை விரும்பினால் உண்டாகும். 362

3.வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
யாண்டும் அஃதொப்பது இல்.

ஆசையில்லாமையைப் போன்ற மேலாகிய செல்வம் இந்த உலகத்தில் இல்லை. வேறு எந்த உலகத்திலும் அதற்குச் சமமான ஒரு செல்வம் இல்லை. 363

4.தூஉய்மை என்பது அவாஇன்மை; மற்றது
வாஅய்மை வேண்ட வரும்.