குற்றங்கடிதல்
109
9.எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவதோர் நோய்.
வரப்போகும் தீமையினை முன்னதாக அறிந்து அஃது அணுகாதபடி காத்துக் கொள்ளத் தக்க அறிவினையுடையவர்களுக்கு அவர்கள் அஞ்சி நடுங்கும் படியாக வரக் கூடிய துன்பம் எதுவும் இல்லை.
எதிரதாக் காத்தல்-பிறகு வரக் கூடியதை முன்னதாக அறிந்து காத்துக் கொள்ளுதல். 429
10.அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்.
அறிவுடையவர் அந்த அறிவைத் தவிர வேறு எதுவும் இல்லாமல் இருந்தாலும், எல்லாப் பொருள்களும் உடையவராகவே இன்புற்று இருப்பர். அறிவில்லாதவர் எல்லா நலன்களும் உடையவராக இருப்பினும், ஒன்றும் இல்லாத ஒருவரைப் போல என்றும் துன்புற்று இருப்பர்.
எல்லாம்-நிலம், நீர், வாகனம், ஏவலாளர், பொன், பதவி முதலிய செல்வங்கள். 430
44. குற்றங்கடிதல்
1.செருக்குஞ் சினமுஞ் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து.
கர்வம், கோபம், இழிகுணம் ஆகிய இந்த மூன்றும் இல்லாதவரது செல்வம் மேம்பாடுடையதாகும்.
செருக்கு-கர்வம், அகந்தை, அஃதாவது தமக்கு வாய்த்துள்ள பட்டம் பதவிகளை நினைத்து அறிவு மயங்கி இருக்கும் நிலை; சினம்-அளவு கடந்த கோபம்,வெகுளி; சிறுமை-இழிவான குணம், காமமுமாம். 431
2.இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு.
உலோபத் தன்மையும், நன்மையின் நீங்கிய மானமும், தகுதிக்கு விஞ்சிய மகிழ்ச்சியும் ஆகிய இவை அரசனுக்குக் குற்றம் ஆகும்.