பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/146

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

திருக்குறள்


4.சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
பெற்றத்தால் பெற்ற பயன்.

சுற்றத்தார் தன்னைச் சூழ்ந்திருக்கும்படி அவர்களோடு அளவளாவி வாழ்தலே ஒருவன் செல்வத்தைப் பெற்ற பயன் ஆகும். 524

5.கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும்.

சுற்றத்தார் விரும்புவன கொடுத்தலும், இன்சொல் கூறுதலும் ஆகிய இரண்டனையும் ஒருவன் செய்ய வல்லவன் ஆனால், அவன் தொடர்ந்து வரத்தக்க பலப்பல சுற்றத்தாராலும் சூழப்படுவான்.

தொடர்ந்து வரலாவது-ஒருவர் பின் ஒருவர் தொடர்பு கூறிக் கொண்டு வருதல். 525

6.பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குடையார் மாநிலத்து இல்.

ஒருவன் மிக்க கொடையாளி ஆகவும், கோபத்தை விரும்பாதவனாகவும் இருந்தால் அவனைப் போல் சுற்றத்தாரை உடையவர் இந்த உலகத்திலே எவரும் இலர்.

மருங்கு-பக்கம், இங்கே பக்கத்திலுள்ள சுற்றத்தார். 526

7.காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள.

காக்கைகள் தமக்குக் கிடைத்த உணவை மறைத்து வைக்காமல், தம் இனத்தை அழைத்து அவைகளோடு கலந்து உண்ணும். அப்படிப்பட்ட தன்மை உடையவர்களுக்கே, சுற்றத்தினரால் அடையக் கூடிய பலவகைச் செல்வங்களும் உள ஆகும்.

கரவா-மறைத்து வைக்காமல்; கரைந்து-அழைத்து. 527

8.பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்.