பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/152

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

திருக்குறள்


5.இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு.

நீதி நெறிப்படி செங்கோல் செலுத்தும் அரசனுடைய நாட்டிலே பருவ மழையும், குறையாத விளைச்சலும் ஒன்று சேர்ந்து உள ஆகும்.

இயல்புளி-இயல்பால்; நாட்ட-நாட்டிலே உள; பெயல்-காலந் தவறாது பொழியும் பருவ மழை; விளையுள்-விளைச்சல்; தொக்கு-ஒன்று சேர்ந்து. 545

6.வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉம் கோடா தெனின்.

மன்னனுக்குப் போரின் கண் வெற்றியைத் தருவது அவன் எறியும் வேல் அன்று: ஆட்சிக் கோலே ஆகும். ஆனால், அக்கோலும் கொடுங்கோலாக இராமல், நேர்மையான் செங்கோலாக இருத்தல் வேண்டும்.

கோடாது எனின்-கோணாமல் இருக்குமானால். 546

7.இறைகாக்கும் வையக மெல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்.

உலகத்தையெல்லாம் அரசன் காப்பாற்றுவான்; அவன் நீதிமுறை தவறாது ஆட்சி புரிவானானால், அவனை அவன் ஆட்சி முறையே காப்பாற்றும்.

இறை-அரசன்; வையகம்-உலகம்; முறை-அரசாட்சி; மூட்டுதல்-தடைப்படுதல்; முட்டாச் செயின்-நீதிமுறைக்குத் தடை நேரும் போது, அத்தடை நேரா வண்ணம் ஆட்சி புரிதல். 547

8.எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்.

தம் குறைகளைத் தெரிவிக்க விரும்புகின்றவர்கள் எளிதில் பார்த்துப் பேசத் தக்க நிலையில் இருப்பவனாகி, அவர்கள் குறையினை ஆராய்ந்து பாராமல், நீதி முறை தவறி நடக்கின்ற அரசன். தாழ்ந்த நிலையை அடைந்தவனாகித் தானே அழிந்து போவான்.