பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

1. இல்லற வியல்

5. இல்வாழ்க்கை


1.இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

நல்லாற்றின் நின்ற துணை.

மனைவி மக்களோடு இல் வாழ்க்கை நடத்தும் ஒருவன் இயல்பாகவே உதவ வேண்டிய நிலையில் இருப்பவர் பிரமசாரி, வானப் பிரஸ்தன், சந்நியாசி ஆகிய மூவகையினர் ஆவர். அம்மூவகையினருக்கும் அவன் நல்வழியிலேயே தகுந்த துணையாக இருக்க வேண்டும்.

இயல்புடைய மூவர் பெற்றோர், பிள்ளைகள், உடன் பிறந்தார் ஆகிய மூவர் என்றும் கூறுவர் ; நல்லாறு-நல்வழி. 41

2.துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்

இல்வாழ்வான் என்பான் துணை.

சுற்றத்தாரால் காக்க முடியாமல் கை விடப்பட்டவர், வறுமையால் வருந்துகின்றவர், நோய் நொடி மூப்பு முதலியவற்றால் வருந்தி ஆதரவற்று இறந்தவர் ஆகிய இம்முப்பகுதியினருக்கும் இல்லற நிலையில் இருப்பவன் ஆதரவாக இருந்து செய்யத் தக்கனவற்றைச் செய்தல் வேண்டும். 42

3.தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல் தான்என்றாங்கு
ஐம்புலத்தா றோம்பல் தலை.
.

நீத்தார் வழிபாடு, கடவுள் வணக்கம், புதியவராக வந்தவரை ஆதரித்தல், சுற்றம் தழுவுதல், தன்னைத்தான் காப்பாற்றிக் கொள்ளுதல் என்னும் ஐந்து பகுதிகளையும் பாதுகாப்போடு செய்தல் இல்வாழ்வானுக்கு முதன்மையான செயல் ஆகும்.

தென்புலத்தார்-இறந்து தென் திசையில் கடவுளாக விளங்குபவர்; விருந்து-புதியவர்; ஒக்கல்-சுற்றத்தார்; ஐம்புலம்-ஐந்து இடம்; ஆறு-வழி; ஓம்பல்-பாதுகாத்தல். 43