பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/276

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

266

திருக்குறள்



பெருமை, சிறுமை என்பன முறையே பெருந்தன்மை வாய்ந்த பெரியாரையும், சிறுமைக் குணமுடைய சிறியாரையும் குறிக்க வந்தவைகளாகும். 978

9.பெருமை பெருமிதம் இன்மை, சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்.

பெருமைக் குணமாவது, பெருமைப்படுதற்குரிய காரணம், உண்டான போதும் செருக்கு இல்லாமல் இருத்தல்; சிறுமைக் குணமாவது எத்தகைய காரணம் இன்றியும் அளவு கடந்த செருக்கினைக் கொண்டு இருத்தல்.

பெருமிதம்-செருக்கு; ஊர்ந்துவிடல்-மேற்கொள்ளல். 979

10.அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்.

பெருமைக் குணம் உடையோர் பிறருடைய குறைபாட்டை மறைத் துப் பேசுவர்: சிறுமைக் குணம் உடைத்தோர் குணத்தை மறைத்துப் பிறருடைய குற்றத்தையே, கூறி விடுவர்.

அற்றம்-அவமானம், குறைபாடு, மறைக்கத் தக்கது; குற்றமே என்பதில் உள்ள ஏகாரம் குற்றத்தைத் தவிர்த்துப் பிற நலன்களை அவர் கூறார் என்பதைத் தெரிவிக்க வந்த இடைச்சொல். 980

99. சான்றாண்மை


1.கடனென்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.

தம் கடமைகள் இவை என்பதை அறிந்து சான்றாண்மையை மேற்கொண்டு நடப்பவர்க்கு நல்லனவாய குணங்களெல்லாம் இயல்பாய் இருக்கும் என்று அறிஞர் சொல்லுவர்.

கடன்-கடமை, செய்யத் தக்கவை, இயல்பு; சான்றாண்மை-பெருந்தன்மை;பல நற்குணங்களையும் பெற்று ஆளுந்தன்மை. 981