பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/288

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

278

திருக்குறள்



10.நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை

நாணால் உயிர்மருட்டி யற்று.

உள்ளத்தில் நாணம் இல்லாத மக்கள் உலகத்தில் நடமாடுதல் எதற்குச் சமம் என்றால், மரத்தால் செய்யப்பட்ட பதுமையானது கயிறு கொண்டு ஆட்டப்படுவதனால் இயங்கிக் காண்போருக்கு உயிர் உள்ளதாகத் தோன்றி மயக்குவதற்குச் சமமாகும்.

அகம்-உள்ளம், மனம்; இயக்கம்-நடமாட்டம்; பாவை-பதுமை; நாண் - நாணம்; நாணால்-கயிற்றால்.

நாணம் இல்லாதார் மக்களே அல்லர்; உயிரற்ற மரம் போல்வர் எனபது கருத்து. 1020

103. குடிசெயல் வகை


1.கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்

பெருமையில் பீடுடையது இல.

ஒருவன் தான் செய்ய மேற்கொண்ட செயலைச் செய்யும் போது இச் செயலைச் செய்து முடிக்கும் வரை தான் சோர்வடைய மாட்டேன் என்று சொல்லும் பெருமையைப் போல மேம்பாடானது வேறு ஒன்றும் இல்லை.

கருமம்-செயல், இஃது இங்கே குடும்பச் செயலைக் குறிக்கும்; கைதூவல்-சோர்வு கொள்ளல்; கைதூவேன்-சோர்வடைய மாட்டேன்; பீடு-பெருமை, மேன்மை.

குடிசெயல் வகை-பிறந்த குடும்பத்தை உயரச் செய்யும் திறமை. 1021

2.ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்

நீள்வினையால் நீளும் குடி.

முயற்சியும், நிறைந்த அறிவும் ஆகிய இரண்டினையும் உடைய இடையறாத செயலால் ஒருவன் குடும்பம் உயரும்.

ஆள்வினை-முயற்சி; ஆன்ற-நிறைந்த; நீள் வினை-விடாது புரியும் செயல்: நீளும் குடி-குடும்பம் உயரும். 1022