28
திருக்குறள்
6.மறவற்க மாசற்றார் கேண்மை; துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.
அறிவு ஒழுக்கங்களில் குற்றமற்றவருடைய நட்பினை மறவாமல் இருப்பாயாக. துன்பம் வந்த காலத்திலே உனக்கும் பேராதரவாய் இருந்தவரது நட்பை நீங்காமலிருப்பாயாக.
துறவற்க. நீங்காமலிருப்பாயாக; துப்பாயார்-பேராதரவாக இருப்பவர். 106
7.எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு.
தமக்குற்ற துன்பத்தை நீக்கியவருடைய நட்பினை ஏழு வகையாகத் தொடர்ந்து வரும் எல்லாப் பிறப்புக்களிலும் மறவாமல் நினைப்பர் நல்லோர்.
எழுமை எழு பிறப்பும்-ஏழுவகையாகத் தோன்றும் எல்லாப் பிறப்புக்களும்; விழுமம்-துன்பம். 107
8.நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.
ஒருவர் செய்த உதவியை மறப்பது நல்ல குணம் அன்று. பிறர் செய்த தீமையை அப்பொழுதே மறந்து விடுவது நல்லதாகும். 108
9.கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.
முன்பு நமக்கு ஒரு நன்மையைச் செய்தவர் பிறகு நம்மைக் கொல்வதைப் போன்ற பெரிய துன்பங்களைச் செய்தாராயினும், முன்பு அவர் செய்த அந்த ஒரு நன்மையை நினைத்துப் பார்த்தால், பின்பு அவர் செய்த அந்தத் தீமைகளெல்லாம் தீமையில்லாதனவாக ஒழிந்துவிடும்.
கொன்றன்ன இன்னா - கொலை செய்தாலொத்த துன்பங்கள்; உள்ள-நினைத்துப் பார்க்க. 109
10.எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.