பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/54

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

திருக்குறள்


8.அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.

பொறாமை என்று சொல்லப்படும் ஒப்பற்ற பாவி, தன்னை உடையானது செல்வத்தையெல்லாம் அழித்து, அவனைத் தீய வழியிலும் கொண்டு போய்ச் சேர்த்து விடும். 168

9.அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.

பொறாமையுள்ளம் உடையவனுக்கு நிரம்பச் செல்வமும், பொறாமை இல்லாத, நல்ல உள்ளம் வாய்ந்தவனுக்கு மிகவும் வறுமையும் அமையுமானால், அவை இரண்டும் இவ்விருவர் தம் எண்ணங்களாலேயே இல்லாமல் ஒழிந்து விடும்.

பொறாமையுடையவன் செல்வமுடையவனாய் இருப்பதற்கும், பொறாமை இல்லாதவன் வறுமையில் வாடுவதற்கும், அவரவர் முன் பிறப்பில் செய்த நல்வினை, தீவினைகளே காரணம் என்றும், 'நினைக்கப்படும்' என்பதற்குச் சான்றோரால் ஆராய்ந்து பார்க்கப்படும் என்றும் பொருள் கொள்வர்.

அவ்விய நெஞ்சம்-பொறாமை உள்ளம்; செவ்வியான்-(பொறாமை யில்லாத) சிறந்த குணம் வாய்ந்தவன்; நினைக்க-அறிவினால் எண்ணிப் பார்க்க; படும்-இல்லாமல் அழியும்; பொறாமையால் செல்வம் அழியும். பொறாமை இல்லாத மனத் துாய்மையால் வறுமை அழியும். 169

10.அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதில்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.

பிறருடைய உயர்வினைக் கண்டு பொறாமைப்பட்டுப் பெரியோராக விளங்கிப் பெருமையை அடைந்தவர் இவ்வுலகில் ஒருவரும் இலர். அவ்விதமே அப்பொறாமைக் குணம் இல்லாத நல்ல உள்ளம் வாய்ந்தவர் எவரும் மேன்மையடைவதிலிருந்து, நீங்கியவரும் இலர்.

அழுக்கற்று - பொறாமைப்பட்டு; அகன்றார் - பெருமையை அடைந்தவர்; பெருக்கத்தில்-மேம்பாடு அடைவதில்; தீர்ந்தார்-நீங்கி இருந்தவர். 170