பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/66

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

திருக்குறள்


உலகத்தவர்க்குப் பயன்படும் மரம் ஒன்று ஊரின் நடுவே பழங்களையும் உடையதாய் இருந்தால், அதனால் மக்களுக்குப் பெரிதும் நன்மை ஏற்படுவது போல், ஒப்புரவறிதலாகிய நற்குணம் வாய்ந்தவனிடம் செல்வம் சேர்ந்தால் அச்செல்வம் ஊரில் உள்ள பலருக்கும் பயன்படும்.

பயன் மரம்-மக்களுக்குப் பயன்படும் மரம்; நயன் உடையான்-ஒப்புரவறிதல் என்னும் நற்குணம் உடையவன். 216

7.மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.

ஒரு மரத்தின் வேர், அடி மரம், கிளை, இலை, பூ, காய், கனி முதலிய எல்லாப் பாகங்களும் மக்களுக்கு நோயை நிச்சயமாகத் தீர்ப்பதில் மருந்தாக இருந்து, அஃது ஊரின் பொது இடத்திலும் இருந்தால், எவ்விதம் பலர்க்கும் பயன்படுமோ அவ்விதமே ஒப்புரவறிதல் என்னும் குணம் வாய்ந்த பெருந்தகையாளனிடம் செல்வம் சேர்ந்தால் அச்செல்வம் பலருக்கும் பயன்படும். 217

8.இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்.

தம் கடமையை அறிந்த அறிஞர்கள் பிறருக்கு உதவுவதற்கு வசதி இல்லாத காலத்திலும், பலருக்கு உதவி செய்வதற்குத் தளர மாட்டார்கள்.

இடனில் பருவம்-பிறருக்கு உதவுவதற்குரிய செல்வம் இல்லாத சமயம்; ஒல்கார்-உள்ளம் தளரார்; கடன்-கடமை. 218

9.நயனுடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு.

பிறருக்கு உதவி செய்யும் நற்குணமுடையான் வறுமையடைதல் என்பது செய்ய வேண்டிய தன்மையில் உள்ள செயல்களைச் செய்ய முடியாமல் வருந்துகின்ற நிலைமையை அடைதலேயாகும்.

நல்கூர்ந்தான் ஆதல்-வறுமை அடைந்தவனாக இருத்தல்; செயும் நீர -செய்ய வேண்டிய தன்மையை உடையன; அமைகலா ஆறு- அமைய மாட்டாத இயல்பு. 219