பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/70

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

திருக்குறள்


24. புகழ்


1.ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.

வறியவர்களுக்கு அவர்கள் வேண்டுவனவற்றைக் கொடுத்தல் வேண்டும்; அதனால் புகழ் உண்டாகும்படி வாழ வேண்டும். அவ்விதம் புகழ்பட வாழ்வதல்லது மக்கள் உயிர்க்குப் பயன் வேறொன்றும் இல்லை. 231

2.உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ்.

வறுமையால் இரப்பவர்க்கு அவர் வேண்டிய பொருளைக் கொடுத்து உதவுகின்றவர் மேல் நிற்கும் புகழையே பேச்சில் வல்லவர்கள் எல்லாம் புகழ்ந்து பேசுகின்றார்கள்.

உரைப்பர் - பேச்சில் வல்லவர், புலவர்; பலவழிகளிலும் புகழ் பெறலாம் எனினும், கொடுப்பதால் உண்டாகும் புகழே சிறந்தது என்பது கருத்து. 232

3.ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன் றில்.

நிலையற்ற இந்த உலகத்திலே என்றும் அழியாமல் நிற்பது உயர்வு தங்கிய புகழே ஆகும். மற்றவை நிலைத்து நிற்க மாட்டா. 233

4.நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு.

நிலவுலகத்தில் ஒருவன் என்றும் அழியாத பெரும் புகழைப் பெற்று விடுவானானால், தேவலோகத்தில் உள்ளவர்கள் அங்கே உள்ள தேவர்களைப் போற்றாமல் நிலவுலகத்தில் புகழ் பெற்றுள்ள ஒருவனையே போற்றிப் புகழ்வார்கள்.

நிலவரை-நிலவுலகம்; நீள் புகழ்-அழியாத பெரும் புகழ்: புலவர்- தேவர்: புத்தேள் உலகு-தேவலோகம். 234