பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/78

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

திருக்குறள்


9.அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று.

நெய் முதலிய பொருள்களைத் தீயிற் பெய்து ஆயிரம் வேள்விகள் செய்வதைக் காட்டிலும் ஓர் உயிரினைக் கொன்று அதன் மாமிசத்தைத் தின்னாமல் இருத்தல் நல்லது.

அவி-வேள்வி செய்யும் போது யாகத்தீயில் இடும் இறைச்சி முதலிய பொருள்கள்; வேட்டல்-வேள்வி செய்தல்-யாகம் செய்தல்; செகுத்து-கொன்று. 259

10.கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்.

ஓர் உயிரையும் கொல்லாமலும், பிறரால் கொல்லப் படாமல் தானே இறந்த உயிரின் உடலாய் இருப்பினும், அதனையும் தின்னாமலும் இருக்கின்ற ஒருவனை, எல்லா உயிர்களும் கை குவித்து வணங்கும். 260

27. தவம்


1.உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு.

தனக்கு நேர்ந்த துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளுதலும், பிற உயிர்கட்குத் துன்பம் செய்யா திருத்தலும் ஆகிய அவ்வளவே தவத்தின் வடிவம்.

உற்ற-நேர்ந்த; நோன்றல்-பொறுத்துக் கொள்ளுதல்; உறுகண்-துன்பம்; உரு-வடிவம். 261

2.தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம்அதனை
அஃதிலார் மேற்கொள் வது.

தவம் செய்தல் என்பது எல்லாராலும் இயல்வது அன்று முன்பு நல்வினைகள் செய்துள்ளவர்களுக்கே அஃது இயலும். மற்றவர்கள் அதனை மேற்கொள்வது வீணேயாகும்.

தவமுடையார்-நல்வினைகள் செய்து பண்பட்டவர்; அவம்-வீண் செயல். 262