பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் - அங்கவியல் 154

நாட்டு மக்களின் தேவைக்குக் குறையாத விளைபொருளும், தகுதியுடைய சான்றோர்களும், தாழ்வில்லாத செல்வத்தை உடையவரும் ஒன்று சேர்ந்திருப்பதே நல்ல நாடாகும். 731 பெரும் பொருள்பெருக்கத்தால் அனைவராலும் விரும்பத் தகுந்ததாகியும், கேடுகள் இல்லாததாகியும், மிகுதியான விளைச்சலை உடையதாகியும் விளங்குவதே நல்ல நாடு 732 வேற்றுநாட்டாரையும் தாங்குவதற்கான நிலையில், அவரைத் தாங்கிக் காத்தும், தம் அரசனுக்குரிய இறைப்பொருளை முழுவதும் கொடுத்தும் காப்பதே, நல்ல நாடாகும். 733 நீங்காத பசித்துன்பமும், தீராத நோய்களும், மேல்வந்து தாக்கும் பகைவர்களும் தன்னைச் சேராமல், வலிமையோடும் வளமோடும் விளங்குவதே, நல்ல நாடாகும். 734 பலவாகப் பிரிந்து இயங்கும் கூட்டங்களும், நாட்டைப் பாழாக்கும் உட்பகையும், வேந்தனைத் துன்புறுத்தும் கொலை வெறியுள்ள குறுநில மன்னரும், இல்லாதது நாடு. 735 பகைவராலே கெடுதல்களை அறியாததாய், இயற்கையின் மாறுபாடுகளால் கெட்டவிடத்திலும் வளம் குன்றாமலிருக்கும் நாடுதான், நாடுகளுள் சிறந்த நாடாகும். 736 கீழ்நீரும் மேல்நீரும் என்னும் இருநீர்வளமும், வளம் வாய்ந்த மலைகளும், ஆறுகளும், வலிமையான அரண்களும், ஒரு நாட்டிற்கு வேண்டிய உறுப்புக்களாம். 737 மக்கள் நோயில்லாமலிருத்தல், செல்வம் உடைமை, விளை பொருள் பெருக்கம், இன்பந்தரும் கவின்கலைகள், நல்ல காவல் என்னும் இவ் ஐந்துமே, நாட்டிற்கு அழகு! 738 வேற்று நாடுகளை எதற்கும் வேண்டாதபடி, எல்லா வளமும் கொண்டதே நல்ல நாடு என்பர்; பிறர் உதவியை நாடி அதனால் வளமைவரும் நாடு, நாடே ஆகாது. 739 மேற்சொல்லியவை எல்லாம் சிறப்பாகவே அமையப் பெற்றிருந் தாலும், ஆட்சிநடத்தும் வேந்தன் பொருத்தமில்லாமலிருக்கும் நாடு, பயனற்ற நாடு ஆகும். 740