திருக்குறள் 529. தமராகித் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக் காரணம் இன்றி வளரும். ஒருவருக்குச் சுற்றமாக அமைந்திருந்து பின் யாதானும் ஒரு காரணத்தால் நீங்கியவர்கள் திரும்பவும் காரணமின்றியே சுற்றமாக வருதல் கூடும். சுற்றமாயமைந்தார் காரணமின்றியே பிரிந்து சென்றால், காரணமின்றியே திரும்ப வந்து சேர்வர். சுற்றமாய்க் கொள்ளுதலுக்குக் காரணம் இருத்தல் வேண்டும் என்று உய்த்துணர வைத்தது. பிரிதலுக்குரிய காரணம் இல்லாத நிலையில் பிரிந்தார் தாமே மீண்டும் வருவர் என்றும் கூறியவாறு . 529. 530. உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன் இழைத்துஇருந்து எண்ணிக் கொளல். காரணம் இன்றித் தன்னைப் பிரிந்துபோய் அழைப்பின் பேரில் வந்து சேரும் சுற்றத்தானை, பிரிந்து சென்றதற்குரிய காரணம் யாதென ஆராய்ந்து அது மீண்டும் நிகழாதவாறு பேணிக் காத்துக் கொள்க. சுற்றமாய் அமைதலும் பிரிதலும் அடிக்கடி நிகழின் அன்புக்கு மாறாகப் பகையே வளரும் என்பதறிக. விருப்பறா அன்பில் பகையும் பிரிவும் சேரின் தீராத்துன்பம் தரும். குடம் அமுதுக்கு ஒரு துளி நஞ்சு. 530. 54. பொச்சாவாமை பொச்சாப்பு - மறதி. செய்ய வேண்டிய கடமையைச் செய்யாது விடுதல். களிப்பின் மிகுதியினாலும், சோம்பலின் மிகுதியினாலும் கடமைகளைச் செய்யாது சோர்ந்து விடுதல். மறதி பணிகளைக் கெடுக்கும்; நண்பரை இழக்கச் செய்யும். மறவாது நினைவில் கொள்ள வேண்டியவற்றைக் கொண்டு வாழ்தல், வாழ்க்கையைப் பயனுடையதாக்க உதவி செய்யும். 531. இறந்த வெகுளியின் தீதே சிறந்த உவகை மகிழ்ச்சியின் சோர்வு. நாடாள்வோருக்கு மிகுந்த களிப்பால் வரும் மறதி, அளவிறந்த எரி சினத்திலும் தீயதாம் . களிப்பும் சினமும் அளவொடு இருப்பின் பயன் தரும். அளவினைக் கடப்பின் இரண்டுமே கேடு பயக்கும் என்றுணர்த்தியது. வாழ்க்கைக்குக் களிப்பும் இன்றியமையாத ஒன்று என்றதால் “சிறந்த உவகை’’என்றார். நன்னெறியினைக் காத்ததற்காக ஒரோவழி வெகுளியும் துணை செய்யும். அவியினும் வாழினும் என்?’ என்ற ஆசிரியர் வாக்கை அறிக. அதனால் அளவிறந்த எரிசினம் ஆகாது என்றார். - தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 161
பக்கம்:திருக்குறள் உரை.pdf/165
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை