பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/100

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
86

நேயம் உடையவனா? ‘சிடுசிடு’ என்று இல்லாமல் சுமுகமாகப் பழகுவானா? இவற்றை அறிக.

அவன் தொழில்அறிவு உடையவனா? பொது அறிவும் உள்ளவனா? புத்திசாலியாகச் செயலாற்றுவானா? தெளிவான மனநிலை உள்ளவனா? பதற்றம் இல்லாமல் எதையும் செய்வானா? என்பனவற்றையும் கவனிக்கவும்.

தொழிலில் தேர்ந்த ஞானம் உள்ளதா? அதன் நுட்பங்களை அறிவானா? பழுதுபட்டால் அவற்றைச் சீர்செய்து கொள்ளும் திறமை உள்ளதா? என்பதனையும் ஆராய்க.

தொழில்மேல் கவனம் இல்லாமல் பேராசை கொண்டு சதா நச்சரிப்பானா? சுருட்டுவானா? பண ஆசை மிகுதியாக உடையவனா? இவை எல்லாம் பார்க்கவும்.

மற்றொன்று; ருசி கண்ட பூனை திருடாமல் இருக்காது. வந்து உள்ளே புகுந்தபின் நெளிவுசுளிவுகளை அறிந்து மெல்லச் சுருட்டத் தொடங்குவதும் செய்வான். அவன் நிலையாகத் தவறு செய்யாமல் இருக்கிறானா? சந்தர்ப்பங்களில் கெடுகிறானா? கவனிக்கவும்.

அவன் தனிப்பட்ட முறையில் விற்பன்னனாக இருக்கலாம். ஒரு குறிப்பிட்ட தொழில் செய்வதற்கு அவனுக்குத் திறமை உள்ளதா? கவனிக்கவும்.

மூன்று முனைகள் சந்தித்தால்தான் முக்கோணம் ஏற்படும். தொழில், காலம், ஆள் மூன்றும் பொருத்தமாக இருந்தால்தான் தொழில் செம்மை பெறும்.

‘இன்னான் இன்ன தொழில் செய்வதற்குத் தகுதி’ என்று ஆராய்ந்து அதனை அவனிடம் ஒப்படைப்பது தக்கது ஆகும். அதற்குப் பிறகு அவனைச் சந்தேகிக்காதே.