பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/106

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
92


கடும் குற்றம் செய்பவரை நடுங்க வைத்து அவர்களைத் தண்டிப்பது அரசனது கடமையாகும். அரசனும் ஓர் உழவன்தான். பயிர் செழித்து வளர உழவன் களை பிடுங்கி எறிகிறான். குற்றவாளிகளைக் களைவது அரசனது பொறுப்பு ஆகும்.

56. கொடுங்கோன்மை

கோல் வளைந்தால் அது கொடுங்கோல் ஆகும். நீதி சில சமயம் வளைந்து கொடுக்கிறது. ஏன்? தனக்கு வேண்டியவர்க்கு நன்மை செய்ய அது தாழ்ந்து விடுகிறது. நேர்மை தவறினால் மக்கள் வாழ்வு சீர்மை கெடுகிறது.

மக்களிடம் ஒருசில விதிகளைக் காட்டி வரிப்பணம் பெறுவது அரச நீதியாகும்.

பொதுவாக ஆறில் ஒரு பகுதி வரிப்பணம் செலுத்தி வந்தார்கள். அவர்கள் வருவாயில் ஒரு பகுதி செலுத்துவது நியாயம் ஆகும். மிகையாகக் கேட்பதும், வற்புறுத்திப் பெறுவதும் மக்களை வாட்டுவனவாகும். அப்பொழுது கொள்ளையனுக்கும் இந்தச் சள்ளையனுக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடுகிறது.

அடுத்தது நீதித்துறை; மக்கள் குறைகளை உரைக்கக் கேட்டு உடனுக்குடன் நீதி வழங்க வேண்டும். அவ்வப்பொழுது கேட்டு உடனுக்குடன் நீதி வழங்க வேண்டும். அப்பொழுதுதான் மக்களுக்கு அராஜகம் நடக்காது என்ற நம்பிக்கை ஏற்படும். தண்டிப்பதற்கு ஒருவன் இருக்கிறான் என்றால்தான் மக்கள் கண்டிப்புடன் வாழ்வார்கள்; தவறு செய்ய அஞ்சுவார்கள்.