பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/184

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
170


3. காமத்துப்பால்
அன்பின் ஐந்திணை

பொருள் அகம், புறம் என இருவகைப்படும்; அகம் என்பது இன்னது என்று வெளிப்படுத்த இயலாத காதலின்பம்; புறம் என்பது ஊர் பெயர் குறிப்பிடப்பட்டு நடக்கும் உலகத்து நிகழ்ச்சிகள். அகத்தைக் கூறுவது அகப் பொருள் என்பர்.

இதனை அன்பின் ஐந்திணை என்றும் கூறுவர். மன மொத்த காதலை ஐந்திணை என்று கூறுவர்; ஒருதலைக் காதலைக் கைக்கிளை என்று கூறுவர். பொருந்தாக் காதலைப் பெருந்திணை என்று கூறுவர். ஈண்டு அன்பின் ஐந்திணையே கூறப்படுகிறது.

காதல் ஒழுக்கம் களவியல், கற்பியல் என்ற பாகுபாடுகளைக் கொண்டது. மணம் நடைபெறுமுன் ஏற்படும் சந்திப்புகளும், கூட்டமும், பிரிவும் களவு ஒழுக்கம் எனக் கூறப்படும். மணமானபின் ஏற்புடும் பிரிவுகளையும், மீண்டும் அவர்கள் கூடி இன்புற்று வாழ்தலையும் கற்பியல் என்று கூறுவர். கற்பியலில் ஊடல் நிகழும்.

இச் செய்திகளையே வள்ளுவர் காமத்துப் பாலில் 25 அதிகாரங்களில் கூறுகிறார். இருவரும் முதன்முதலில் சந்திக்கும் சந்திப்பில் நிகழ்ச்சிகள் அமைகின்றன. உரையாடல்கள் நாடகப்பாங்கில் தலைவன் கூற்றாகவும், தலைவி கூற்றாகவும், கவிஞன் கூற்றாகவும் இடம் பெறுகின்றன.