பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/199

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
185


“கண்கள் நீர் வற்றிவிட்டன; அழவும் முடியாமல் அவதிப்படுகின்றன.”

“உறக்கம் இன்றி என் கண்கள் துயர் உழக்கின்றன; இரக்கப்பட்டு என்ன பயன்?”

“கண்கள் எனக்குத் துன்பம் விளைவித்தன. அவை இப்பொழுது வேதனைப்படுகின்றன; எனக்குத் துன்பம் செய்த கண்கள் வருந்துவதில் எனக்கு மகிழ்ச்சியே.”

“விரும்பி அவரைக் காணச் சென்றன; இன்று உறக்க மின்றி வருந்துகின்றன; வருந்தட்டும்.”

“சொல்வேறு அவர் செயல்வேறு; அப்படி இருந்தும் அவரைப் பார்க்க விழைகின்றன; அமைதி இன்றித் தவிக்கின்றன என் கண்கள்.”

“அவர் வராவிட்டாலும் தூங்குவது இல்லை; அவர் வந்துவிட்டாலும் உறங்குவது இல்லை; என் செய்வது?”

“கண்கள் துன்பத்தை வெளிப்படுத்தி என்னை ஊரவர்க்குக் காட்டிக் கொடுத்துவிடுகின்றன. அவற்றை நான் திருத்தவா முடியும்?”

119. பசப்பு உறு பருவரல்
(பசப்புத் தரும் துன்பம்)

தலைவி கூற்று

“தவறு என்னுடையதுதான்; நான்தான் என்னை விட்டுப் பிரிந்து போக அவரை அன்று அனுமதித்தேன்."