பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/20

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
6


மாசு என்று குறிப்பிட்ட குற்றங்கள் யாவை? பொறாமை, பேராசை, கோபம், கடுஞ்சொல் இவை நான்கும் தவிர்ப்பதே அறச்செய்கையாகும். இவையே மனத்தில் எழும் குற்றங்கள் ஆகும்.

நாளைக்கு என்று அறம் செய்வதைத் தள்ளிப் போடாதே; இன்றே தொடங்குக; அது பெருகும் பல மடங்கு அஃது இறுதிக்காலத்தில் உறுதிகளைத் தரும். காலன் அழைக்கும்போது அவனைத் தடுத்து நிறுத்தும்.

பல்லக்குச் சுமக்கிறவன் ஒருவன்; அதில் சுகவாசி ஏறிச் செல்கிறான்; இருவரும் வாழ்க்கையின் இரு எல்லைகள்; இவர்கள் நாம் கூறும் அறத்தைக் கேட்கும் நிலையில் இருக்கமாட்டார்கள். ஒருவருக்குப் பசி; மற்றவருக்குச் செல்வ மயக்கம்; இருவரும் செவி கொடுத்துக் கேட்கும் நிலைக்கு வரமாட்டார்கள். அற வேட்கை உடையவர்க்கே கேட்கையும் நிகழும்.

வாழும் நாள் சிலவே. அதனை வீழும் நாளாக மாற்றாதே அறம் செய்க, அஃது உன் பிறப்பு அறுக்கும் முயற்சிகளில் முதன்மையானது; துஞ்சிய நாள் போக எஞ்சிய நாள் சிலவே உள்ளன; பிறப்பு வாராமல் தடுக்க அறம் செய்க.

இன்பம் தேவைதான்: அறத்தின்வழி அஃது அமை யட்டும்; அது புகழைத் தரும்; ஏனைய வழிகளில் இன்பம் வரலாம்; அதனால் புகழ் கிடைக்காது.

தக்கது இது, தகாதது இது என்று மிக்கது கூற வேண்டுமென்றால் அறம் செய்வதே தக்கது; தகாதது பழி விளைவிக்கும் செயல்; பழி நீக்குக, அறம் வளர்க்க.