பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/35

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
21

தட்டு ஒரு பக்கம் சாயச் சீர்தூக்கும் கோலை வலியச் சாய்த்தால் அவன் சாய்வது நிச்சயம்.

நேர்வழியில் பொருள் ஈட்டினால் அதனைச் சீராக வைத்துக்கொள்ள முடியும்; அது நிலைத்து நிற்கும். குறுக்கு வழியில் சென்றால் சறுக்கி விழ வேண்டியதுதான். புதை குவியல் என்று செல்வத்தைச் சேர்த்து வைக்கலாம். அஃது அழுகிப் பின் கெடும் அவியல் என்று அவனுக்குத் தெரியாது.

உழைக்காமல் ஈட்டிய செல்வம் எளிதில் கிடைத்த பொருள் என்பதால் அதனைக் காக்கும் முயற்சி அவனிடம் இருக்காது. கொள்ளை அடித்த பொருள் அதன் அருமை தெரியாது; அணுஅனுவாகச் சேர்க்கும் பொருள் உழைப்பின் பின்னணியைக் கொண்டது; எளிய இன்பங்களுக்கு அவற்றை அளித்துவிட்டு அவன் பிறரிடம் காசுக் காகப் பல் இளிக்கும் நிலையை அடைகிறான்; அவன் வாழ்க்கையில் எளியன் ஆகிவிடுகிறான். அவன் விட்டுச் செல்லும் சந்ததிக்கு அவன் ஈட்டிய பொருள் எட்டவே எட்டாது. அப்படி அவர்கள் கைக்கு வந்தாலும் அவர்கள் அதனை வைத்துக் காப்பாற்ற மாட்டார்கள்; அழிக்கும்வரை அவர்கள் விழித்துச் செயல்படுவர்.

வாழும் போது ஒருவன் எப்படி வாழ்கிறான் என்பதனைப் பிறர் பேச மாட்டார்கள். அவன் கண் மூடியதும் மற்றவர்கள் அப்பொழுதுதான் தம் கண் திறந்து பார்ப்பார்கள்; அவன் குறைகள் வெளிப்படும்; சுத்தமான விமர்சனங்கள் நடைபெறும். தக்க வழியில் உழைத்துப் பொருளை ஈட்டினானா? தகாதவழியில் குவித்தானா? என்பன வெளிப்படும்.