பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/38

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
24


காத்துப் பழகிய நீ அடக்கத்தையும் உன் உள்ளடக்கத்தில் சேர்த்து வைக்கவும்; அதனைவிட உன் உயிருக்கு ஆக்கம் தருவது வேறு எதுவும் இருக்க முடியாது.

வாயை மூடிவை; செவிகளைத் திறந்துவை; அறிய வேண்டியவற்றை அமைதியாக அறிய முயற்சி செய். காற்றும் வெளிச்சமும் ஆரோக்கிய வாழ்வுக்கு அவசியம். அவசரப்பட்டு முத்துகளை உதிர்க்காதே; தேவைப்படும் போது அவற்றுக்குத் தக்க விலை கிடைக்கும்.

மலை என்ற பெயரே அஃது எதற்கும் குலையாமல் இருப்பதால்தான். நீ உன் நிலையில் திரியாதே; அடங்கி இரு; எளிதில் அசைக்க எந்தச் சூறாவளியாலும் முடியாது. அடங்கி அமைதியாக இருப்பவனின் தோற்றம் மலையினும் மாட்சி உடையது; மதிக்கத் தக்கது.

பேதமற்ற நிலை என்ற ஒன்றைக் கூறினால் அனைவருக்கும் உரியது அடக்கம். இதில் ஏழை, செல்வன் என்ற வேறுபாடு இருக்காது. எனினும் பணிவு என்பது செல்வர்க்கே அழகை மிகுதியாகச் சேர்க்கும்.

ஆமை என்பது பிறருக்குப் புலப்படாமை உடையது. கனத்த ஓடு அஃது உறையும் கூடு; கடன்காரனைப் போல அஃது அடிக்கடி தலைகாட்டாது; மானம் உள்ளவனாக உள்ளே ஒடுங்கி இருக்கும். அஃது உன்னால் இயலாமை தான்; என்றாலும் அடக்கம் தற்காப்பு அளிக்கும்; ஏழு பிறப்புக்கும் நன்மை விளைவிக்கும்; உன்னை யாரும் தொட இயலாது; உன் வாழ்வு கெட வாய்ப்பு நேராது.

நா அடிக்கடி வெளியே நீட்டுகிறது. அதைக் கட்டிப் போடு. இல்லாவிட்டால் வீண்வம்பை விலைக்கு வாங்கி வந்துவிடும்; பிறகு வருந்துவாய்; அதனால் நாவினைக் காப்பாயாக.