பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/42

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
28


ஒருசிலர் தம்மைப் பெரிய மனிதன் என்று சொல்லிக் கொள்ளலாம். ஒருவன் பின்விளைவு பாராமல் ஒருத்தியை விழைந்தால் அவன் மதிப்பு இழந்தவன் ஆகிறான். அவன் எத்தகையவனாக இருந்தாலும் அவன் இத்தகைய செயலைச் செய்தால் வெறுப்புக்கு ஆளாவது உறுதி; எதிர்ப்புக்கு உரியவன் ஆவான்.

வாசற்கதவைக் கடந்து மற்றொருத்தியோடு உறவு கொள்ள நினைப்பது தவறு. அப்படி ஒருவன் நடந்து கொண்டால் அவனுக்கு அப்பொழுது எந்தத் தீமையும் நேராமல் இருக்கலாம்; தெரிந்தால் என்ன ஆகும்? அழியாப் பழி அவனை அழித்துவிடும்.

இதனால் என்னதான் ஆகிவிடும்? குடி முழுகியா போய்விடும் என்று தடித்தனமான வினாவை எழுப்பலாம்; அவனைச் சார்ந்தோருக்கு முதலில் தெரிந்தால் பகை உண்டாகும். குத்துவெட்டு ஏற்படாமல் இருந்தால் புண்ணியந்தான். கொண்டவன் இதனைக் கண்டுகொண்டு மண்டாகவா இருப்பான்? தண்டுகொண்டு தாக்க மாட்டானா? தப்பித்துக்கொள்ளலாம்; ஆனால் அந்தப் பகை என்றும் நிலைத்து இருக்கும்.

யாரும் இதனைக் கவனிக்கவில்லை; எந்தக் கேடும் நிகழவில்லை என்று நினைக்கலாம். ஆனால் அறநூல்கள் இதனைப் பாவமான செயல் என்று காண்பிக்கத்தான் செய்யும். உன் மனச்சான்று இடித்து உரைக்கும்; நீ செய்வது அறத்துக்கு மாறுபட்ட செயல் என்பதை அது சொல்லிக் கொண்டே இருக்கும்.

இதில் நீ கண்டது என்ன? அச்சம்தான் மிச்சம். நடுங்கி நடுங்கிச் சாகவேண்டியதுதான். இதற்கு விளக்கம் தேவையில்லை; அஞ்சி அஞ்சிச் சாவார்கள் இந்த அவதியிலே.