பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/46

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
32

நிறுத்த முடியும்; படகு கவிழாது; நமக்குத் தெரியாமல் செல்லரித்துக்கொண்டே போனால் படகில் ஒட்டைவிழும்; அதனைக் கவனிக்கமாட்டார்கள்; வெளிப்பகையைத் தாக்குப் பிடிக்க முடியும்; உட்பகையைத் தடுத்து நிறுத்த முடியாது; பொறாமை உடையவர்க்கு அதுவே போதும் அதனை உடையவனை அழிக்க; வெளியே இருந்து பகைவர்கள் வரத்தேவை இல்லை.

அழுக்காறு உடையவன் பிறர் செல்வம் கண்டு புழுங்கிக் கொண்டே இருந்தால் அவன் தேறவே மாட்டான். வறுமை அவனை இறுகப் பற்றும்; அவன் சுற்றத்தவரும் அவனை நம்பி வாழ்பவரும் அவனோடு சேர்ந்து அழிந்துவிடுவர்.

அந்த வீடு சோம்பல் தங்கும் இடமாக மாறிவிடும்; தரித்திரம் தாண்டவம் ஆடும்; அங்குத் திருமகள் எட்டியும் பார்க்கமாட்டாள்; அவள் தமக்கை மூதேவியை அனுப்பி வைத்துவிட்டுத் தான் வெளியேறிவிடுவாள்; அவன் வாழ்க்கை பொலிவு இழந்துவிடும்.

அதே போலப் பொறாமை என்னும் பேய்க்கு இடம் கொடுத்தால் அது வீட்டில் உள்ள பொருள்களை எல்லாம் நாசம் செய்துவிடும்; அவனைத் தீய வழிகளில் கொண்டு சென்று அவனையும் அழித்துவிடும். அழுக்காறு என்னும் பேய் எந்தப் பாவமும் செய்யத் துணியும். பாவத்துக்குக் காரணமான இந்தப் பொறாமையை அகற்றுவதுதான் தக்க செயல் ஆகும்.

ஒருசிலர் பொறாமை உடையவர்கள் முன்னுக்கு வந்திருக்கலாம்; நேர்வழியில் வாழ்கிறவர் சரிந்தும் போய் இருக்கலாம். இவர்கள் எல்லாம் நமக்கு உதாரண புருஷர்கள் என்று எடுத்துக்கொள்ளக் கூடாது. அவர்கள் விதிவிலக்குகள் என்று கொள்க. நேர்வழியும் விடாமுயற்சி